டிரைவரே இல்லாமல் பயணிகளுடன் இயங்கும் வாகனத்தை உருவாக்கும் டாடா.. பேடண்ட்டே வாங்கியாச்சா! பார்சலையும் ஏற்றலாம்!
நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). இந்த நிறுவனமே டிரைவரே இல்லாமல் பயணிகளுடன் பயணிக்கின்ற மாதிரியான ஓர் தன்னாட்சி திறன் மிக்க வாகனத்தை தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஓர் தனித்துவமான தோற்றம் கொண்ட வாகனத்திற்கு பேடண்ட் உரிமம் பெற்றிருக்கின்றது. டாடா ஒய்யு (Tata Yu.) எனும் வாகனத்திற்கே டாடா தற்போது பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது.
இதுகுறித்த ஆவணங்களே தற்போது வெளியாகி உள்ளன. டாடா ஒய்யு, பார்க்க இது ஓர் மினி வேனை போல இருக்கும். பயணிகள் சொகுசாக அமர்ந்து பயணிப்பதற்கு என்றே பிரத்யேக வடிவமைப்பை இது பெற்றிருக்கின்றது. இதற்காக, அதிக இருக்கைகளை இது தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கின்றது.

மேலும், இது பயணிகள் வாகனமாக மட்டுமல்ல பார்சலை ஏற்றிச் செல்கின்ற வாகனமாகவும் பயன்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் பயணிகளையும், சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்ல முடியும். இத்தகைய வாகனத்தையே டாடா தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் வாகனம் ஆகும்.
டாடா தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த மாதிரியான தானாக இயங்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வர தொடங்கிவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இந்திய நிறுவனங்கள் பேடண்ட் உரிமம் பெறுவதற்கே இப்போதுதான் முன் வந்திருக்கின்றன. இந்த வகை வாகனங்கள் பயணிகளை பிக்-அப் செய்து உரிய இடத்தில் டிராப் செய்யும்.
இதேபோல், டெலிவரி சேவையில் குடவுனில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு உரிய இடத்தில் சென்று டெலிவரி செய்யும். இந்த வாகனங்களின் வாயிலாக ஓட்டுநர் தேவை மிகப் பெரிய அளவில் குறைக்கப்படும். மேலும், மனித தவறுகளையும் மிகப் பெரிய அளவில் குறைத்துவிட முடியும்.
மேன்-பவர் தேவை குறையும் என்பதால் குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு ஏற்படும் செலவீணமும் மிகப் பெரிய அளவில் குறைய நேரிடும். டாடா ஒய்யு பற்றிய முக்கிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், கணிசமான தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கான்செப்ட் (முன் மாதிரி) மாடலாக தயாரிக்கப்பட்டு இருக்கும் டாடா ஒய்யு 3,700 மிமீ நீளமும், 1,500 மிமீ அகலமும், 1,800 உயரமும் கொண்டிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆகையால், இது பயணிகள் வாகனமாக வந்தால் அதிக நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனமாகவும், டெலிவரி பிரிவிற்கான வாகனமாக வந்தால் அதிக பொருட்களை ஒரே நாளில் ஏற்றிச் சென்று டெலிவரி கொடுக்கும் வாகனமாகவும் செயல்படும் என தெரிகின்றது. இந்த வாகனத்தின் இயக்கத்திற்காக ஹப் வகை மோட்டாரையே டாடா பயன்படுத்தி இருக்கின்றது.
ஆனால், என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக் இதில் வழங்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதேபோல், இதன் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கப்படும் என்கிற விபரமும் வெளியாகவில்லை. எப்படியும் 2030 ஆம் ஆண்டிற்கு பின்னரே இதன் உற்பத்தி பணிகள் நாட்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகையால், இது பயன்பாட்டிற்கு வர ஏறத்தாழ 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என யூகிக்கப்படுகின்றது. பெங்களூருவில் உள்ள ஸ்ட்ரேட் ஸ்கூல் ஆஃப் டிசைன்-இல் வைத்தே இந்த வாகனத்தை டாடாவின் மூத்த டிசைனர்கள் வடிவமைத்திருக்கின்றனர். இதுதவிர சில பிரபல டிசைனர்களும் இந்த வாகனத்தின் வடிவமைப்பில் தங்களின் பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்ற வாகனங்கள் பயன்பாட்டிற்கும் வரும் எனில் டாக்சி மற்றும் டெலிவரி சேவை நிறுவனங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். ஆனால், டாக்சி துறையை நம்பி பணியாற்றி வரும் டிரைவர்களின் நிலைமை மிக மோசமானதாக மாறிவிடும். இத்தகைய செயலுக்கு துணை போகின்ற மாதிரியான வாகனத்தையே டாடா தயார் செய்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









