டீ குடிச்சிட்டு வருவதற்குள் காரை சார்ஜ் நிரப்பிடும்! ஏர்போர்டுக்கு அருகே டாடா திறக்கும்னு எதிர்பார்க்கல!
டாடா பவர் (Tata Power), பிரம்மாண்டமான டாடா குழுமத்தில் ஆற்றல் தொடர்பான சாதனங்களை கண்டுப்பிடிக்கும் மற்றும் தயாரிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. டாடா எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகளை உருவாக்கி கொடுக்கும் நிறுவனமாகவும் டாடா பவர் விளங்குகிறது. இதனாலேயே, டாடா எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய 4-சக்கர இவி உற்பத்தியாளரான டாடா பேசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துடன் டாடா பவர் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டாடா பவர் நிறுவனம், டாடா பேசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து, மும்பையில் முதல் பிரீமியம் தரத்திலான & பெரிய அளவிலான இவி சார்ஜிங் மையத்தை 'டாடா.இவி மெகாசார்ஜர்' (TATA.ev Megacharger) திட்டத்தின் கீழ் திறந்து வைத்துள்ளது. மும்பையின் முதல் டாடா ஃபாஸ்ட் சார்ஜர் என்பது மட்டுமின்றி, இந்தியாவிலேயே பெரிய டாடா.இவி மெகாசார்ஜர் மையமாகவும் இது விளங்குகிறது.

டாடா நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட மெகா இவி சார்ஜிங் மையத்தை உலக இவி தினமான இன்று (செப்.9) டாடா பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் பிரவீர் சின்ஹா மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் மின்சார வாகனங்கள் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநரான திரு.ஷைலேஷ் சந்திரா ஆகியோரால் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 அருகேயுள்ள லீலா மும்பை ஹோட்டல் வளாகத்தில் அமைந்துள்ள புதிய மற்றும் முதல் டாடா.இவி மெகாசார்ஜர் மையம் ஆனது தனிப்பட்ட கார் உரிமையாளர்கள் முதல் டாக்ஸிகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Logistics) நிறுவனங்கள் வரை அனைத்து வகை எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இவி ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் ஆனது வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுத்தமான மற்றும் பசுமையான போக்குவரத்தை பெற வழிவகுக்கிறது. இந்த மையத்தில் 120kW வேகத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்ட எட்டு ஃபாஸ்ட் DC சார்ஜர்கள் உள்ளன. இதில் 16 சார்ஜர்கள் ஒரே நேரத்தில் 16 எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும்.
இது மும்பையின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட சார்ஜிங் நிலையங்களில் ஒன்றாகும். இதனால், எந்தவொரு எலக்ட்ரிக் வாகனத்தையும் விரைவாக சார்ஜ் செய்யக்கூடியதாக சார்ஜிங் நேரத்தைக் குறைத்து, தடையற்ற பயனர் அனுபவத்தை உறுதி செய்கிறது. இந்த மெகாசார்ஜர் மையம், மும்பையில் டாடா பவர் ஏற்கனவே நிறுவியுள்ள 1000 க்கும் மேற்பட்ட பசுமை சார்ஜிங் நிலையங்களுடன் ஒன்றாக இணைகிறது.
மேலும், இது டாடா.இவி வாடிக்கையாளர்களுக்கு 25% வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் சார்ஜருக்கு முன்னுரிமை வழங்குதல் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்த சார்ஜிங் சேவைகளை 'டாடா பவர் EZ சார்ஜ்' என்கிற மொபைல் செயலி (4 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்கள்) மூலம் தடையின்றி அணுக முடியும். மேலும், விரைவில் டாடா எலக்ட்ரிக் வாகனங்களின் உரிமையாளர்களுக்கான 'iRA.ev கனெக்டட் கார்' செயலியிலும் கிடைக்கும்.
630க்கும் மேற்பட்ட நகரங்களில் (மும்பையில் 1000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்கள்), 5,500க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனிப்பட்ட EV சார்ஜிங் நிலையங்கள், 1.4 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு சார்ஜர்கள் மற்றும் 1,200 க்கும் மேற்பட்ட பேருந்து சார்ஜிங் நிலையங்களுடன், டாடா பவர் இந்தியாவில் பரந்த இவி சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் அமைத்திருப்பினும், டாடா பவர் நிறுவனம் அமைத்த முதல் மெகா சார்ஜர் தற்போது மும்பையில் திறக்கப்பட்டு இருப்பது ஆகும். 2030ஆம் ஆண்டிற்குள், மெகா சார்ஜர்களை அதிகரிக்க திட்டமிட்டிருக்கும் டாடா பவர் நிறுவனம், அதேநேரம் 7.5 லட்சம் வீட்டு சார்ஜர்கள் மற்றும் 10,000 பொது சார்ஜிங் நிலையங்களாக அதிகரிக்கவும் இலக்கு வைத்துள்ளது. இது ஒரு உண்மையான பசுமை போக்குவரத்து சூழலமைப்பிற்கு அடித்தளம் அமைக்கும் முயற்சி ஆகும்.


Click it and Unblock the Notifications








