மஹிந்திராவுக்கு இனிமே தான் பிரச்சனை ஆரம்பம்... யாருக்கும் தெரியாமல் கமுக்கமா சாலையில் சென்ற புதிய டாடா கார்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பஞ்ச் (Punch) காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேட் வெர்சன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய மார்க்கெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார்களுள் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரும் ஒன்றாகும். இந்த நிலையில், டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் காட்சியளித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றான பஞ்ச் அதற்கேற்ப அளவிலும் சற்று சிறியதாக உள்ளது. இருப்பினும், பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கும், முதல்முறையாக கார் வாங்குபவர்களுக்கும், மகளிர், முதியவர்களுக்கும் ஏற்ற காராக டாடா பஞ்ச் உள்ளது.

இதனாலேயே டாடா பஞ்ச் கார்களின் விற்பனை சிறப்பானதாக இருந்தது. ஆனால், அது கடந்த 2024ஆம் ஆண்டு வரையில் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக 3 மாதங்களாக இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை கூட பிடித்தது. ஆனால், இந்த 2025ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து பஞ்ச் கார்களின் விற்பனை குறைய துவங்கியது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும் அவற்றுள் முக்கியமானது, பஞ்ச் காரை டாடா நிறுவனம் அப்டேட் செய்து சில காலம் ஆகிவிட்டது என்பதாகும். 2021ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) காராக பஞ்ச் காரை அறிமுகம் செய்தது. சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை விட குறைவான விலையில் கார் வாங்க விரும்புபவர்களின் சாய்ஸாக டாடா பஞ்ச் விளங்கி வருகிறது.

இருப்பினும், அப்டேட் செய்யப்பட்டு வருடக் கணக்கில் ஆகிவிட்டதால் பஞ்ச் கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதனை புரிந்துக் கொண்டதை அடுத்தே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. வருகிற தீபாவளி பண்டிகை சமயத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டாடா பஞ்ச் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களில், புதிய பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளித்தாலும், காருக்கு பின்பக்கத்தில் மேற்கூரையில் ஸ்பாய்லர், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் ஸ்போர்டியான தோற்றத்திலான பம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த படங்களில் காரின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.

ஆனால், இதற்கு முன்னர் வெளியாகி இருந்த ஸ்பை படங்களில் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தையும் காண முடிந்தது. அந்த படங்களில், பொனெட்டில் எல்இடி டி.ஆர்.எல்-கள் மற்றும் பம்பரில் பொருத்தப்பட்ட ஹெட்லைட்கள் உடன் புதிய பஞ்ச் காரின் முன்பக்கத்தை காண முடிந்தது. மற்றப்படி, காரின் பக்கவாட்டில் புதிய அலாய் சக்கரங்களை தவிர்த்து வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் உண்மையில் அருமையான எஸ்யூவி கார் ஆகும். ஆனால், அப்டேட் செய்யப்பட்டு நீண்ட காலம் ஆனதாலும், மஹிந்திரா (Mahindra) உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் போட்டி அதிகமானதாலும் பஞ்ச் காரின் விற்பனை சரிவை கண்டு வருகிறது. இதனை சமாளிக்க பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் அவசியமாகிறது.
Source: Motoroids_india


Click it and Unblock the Notifications









