மிடில்-கிளாஸ் மக்களின் கார் வாங்கும் ஆசை இதன் மூலமா தான் நிறைவேறுது! டாடாவில் குவியும் கஸ்டமர்ஸ்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். சமீப காலத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch) உள்ளிட்ட கார்கள் முக்கியமான காரணமாக விளங்குகின்றன. குறிப்பாக, பஞ்ச் ஆனது மிடில்-கிளாஸ் மக்கள் அனைவராலும் வாங்கக்கூடிய காராக உருவெடுத்தது. இதனால், டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையில் பஞ்ச் கார்கள் உற்பத்தி அதிகரித்த நிலையில், பஞ்ச் கார்கள் உற்பத்தியில் டாடா நிறுவனம் 5 லட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்ததை சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட பஞ்ச் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார்களுக்கு கிடைத்துவரும் வரவேற்பை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் டாப்-10 கார்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் குறைந்தது 6-7 கார்களாவது மாருதி சுஸுகி கார்கள் இருக்கும்.

அந்த அளவிற்கு ஆதிக்கம் நிறைந்த மாருதி சுஸுகி கார்களுக்கு மத்தியில் மக்களின் மனதை வென்று இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக முதலிடத்தை பெற்று டாடா பஞ்ச் ஆச்சிரியப்படுத்தி இருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டில் மார்ச், ஏப்ரல், மே என தொடர்ச்சியாக 3 மாதங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் காராக பஞ்ச் முதலிடத்தை பிடித்தது.
அதன்பின் முதலிடத்தை இழந்தாலும், இந்தியாவின் டாப்-10 கார்களுள் பஞ்ச் இல்லாமல் இருந்ததே கிடையாது. இதற்காகவே, 2024இல் சிறப்பாக விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக டாடா பஞ்ச் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகளவில் எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படும். அதாவது, அளவில் சிறிய எஸ்யூவி கார்கள் மைக்ரோ-எஸ்யூவி கார்கள் என்றும், பெரிய அளவிலான எஸ்யூவி கார்கள் வெவ்வேறான பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன.
சப்-காம்பெக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி, ஃபுல்-சைஸ் எஸ்யூவி என்பன அவை ஆகும். இவ்வாறான உடலமைப்புகளில் இந்தியாவில் பல எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் என்றால், அது டாடா பஞ்ச் ஆகும். அந்த அளவிற்கு மக்கள் கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையில் பஞ்ச் கார்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 31 டாடா பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 2வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் இதனை காட்டிலும் 13 ஆயிரத்து 871 யூனிட்கள் குறைவாக 1 லட்சத்து 88 ஆயிரத்து 160 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த ஆண்டில் வேறெந்த எஸ்யூவி காரும் 2 லட்சம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகவில்லை. இதனால், டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையில் பஞ்ச் கார்கள் உற்பத்தி ஆனது தொடச்சியாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பஞ்ச் கார்கள் உற்பத்தியில் 5 இலட்சம் என்கிற இமாலய மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் கடந்துள்ளது.
அதாவது, ஆரம்பத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் பஞ்ச் கார்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. டாடா பஞ்ச் காரின் தொடர் வெற்றி பயணத்திற்கு, அதன் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் முக்கிய காரணமாகும். அதாவது, பெட்ரோல், சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, பஞ்ச் எலக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் மூலமாக ஏற்கனவே எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச் கார் 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட போதே பெரிய அளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்த்தோம். அதுபோலவே, பஞ்ச் காரின் வெற்றியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து அறுவடை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








