5 ஸ்டார் ரேட்டிங் காரின் விலை நம்ப முடியாத அளவு குறையுது! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ஷோரூம்ல இருப்பீங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), கார்தேக்கோ தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 10,704 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 15,643 பன்ச் கார்களை விற்பனை செய்திருந்தது. இது 32 சதவீத வீழ்ச்சி ஆகும்.

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி கார் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10,785 டாடா பன்ச் கார்களை விற்பனை செய்திருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 10,704 ஆக சரிவடைந்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில், 81 டாடா பன்ச் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இப்படி விற்பனையில் சரிவை சந்தித்திருக்கும் காரணத்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Bestselling Cars In August 2025) டாடா பன்ச் இடம்பெறவே இல்லை. மாறாக டாடா பன்ச் காருக்கு 11வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆனால் வரும் மாதங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல், அனேகமாக வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு, டாடா பன்ச் காரின் விலை அதிரடியாக குறையவுள்ளது. ஜிஎஸ்டி (GST) வரிகள் குறைக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான பத்திரிக்கை செய்தியின்படி பார்த்தால், டாடா பன்ச் காரின் விலை 85 ஆயிரம் ரூபாய் வரை குறையவுள்ளது.
தற்போதைய நிலையிலேயே டாடா பன்ச் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகதான் உள்ளது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.20 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.32 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஏற்கனவே விலை ஓரளவிற்கு குறைவாக இருக்கும் நிலையில், மேற்கொண்டு 85 ஆயிரம் ரூபாய் வரை குறையவுள்ளதால், வரும் மாதங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கலாம். டாடா பன்ச் காரானது, ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் மற்றும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் ஆகியவை முறையே குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்புகளின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு பாதுகாப்பான காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








