25 வருஷத்துக்கு முன்ன மக்கள் யாரும் கண்டுக்கல! மொத்தமா வேற உருவத்தில் வருகிறது - டாடாவின் மாஸ்டர் பிளான்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அடுத்ததாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய பல்வேறு புதிய கார்களை தயார் செய்து வருகிறது. அவற்றுள் ஒன்று, டாடா சியார்ரா (Sierra) ஆகும். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 (Bharat Mobility Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட டாடா சியார்ரா காரின் தோற்றம் இவ்வாறுதான் இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த காரின் படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. 2025 டாடா சியார்ரா காரின் கிராஃபிக்ஸ் படமாக தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ள படம் உள்ளது.
டாடா சியர்ரா, இந்த பெயர் ஒன்றும் நம் இந்திய கார்கள் மார்க்கெட்டிற்கு புதியது இல்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2000ஆம் காலக்கட்டத்தில் 'சியார்ரா' பெயரில் ஒரு காரை விற்பனை செய்தது. கிட்டத்தட்ட அந்த காரின் அடுத்த தலைமுறை காராகவே புதிய சியார்ரா உருவாக்கப்பட்டு வருகிறது.

இதே ஃபார்முலாவை தான் சஃபாரி (Safari) கார் விஷயத்திலும் டாடா நிறுவனம் செய்திருந்தது. அதாவது, பழைய சஃபாரி காரின் பெயரில் புதிய சஃபாரி காரை கடந்த 2021ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. பழைய சஃபாரி காரின் விற்பனை ஓரளவிற்கு நல்லப்படியாகவே இருந்தது. ஆனால், பழைய சியார்ரா காரின் விற்பனை சுமாராகவே இருந்தது. உங்களில் நிறைய பேருக்கு டாடா சியார்ரா காரை பற்றி தெரிந்திருந்தாலே ஆச்சிரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிக விலை, டாடா சியார்ராவின் வெற்றிக்கு பெரும் தடையாக இருந்தது. புதிய சியார்ரா காரையும் அப்போதுபோல் கொஞ்சம் அதிக விலையில்தான் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம். ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ஏறக்குறைய ரூ.11 லட்சம் என்கிற அளவில் யூகிக்கிறோம். இருப்பினும், அப்போது இருந்த இந்திய கார் மார்க்கெட்டிற்கும், இப்போதைய மார்க்கெட்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளதால் புதிய சியார்ரா கார் இந்த முறை வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறோம்.

அதுமட்டுமின்றி, எந்தவொரு காரும் இல்லாத புதுமையான தோற்றத்தில் புதிய சியர்ரா கார் உருவாக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாக நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம். 5- 6 பேர் அமரக்கூடிய காராக இருப்பினும், வேன் போன்றதான டிசைனில் நடந்து முடிந்த 2025 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறத்திலான சியார்ரா கார் இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
தற்போது, இணையத்தில் கசிந்துள்ள படத்தில் புதிய சியார்ரா கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் காட்டப்பட்டு இருப்பினும், காரில் கொண்டுவரப்பட்டுள்ள சிறு சிறு டிசைன்களை காண முடிகிறது. இந்த படத்தின் மூலம், புதிய சியார்ரா காரும் பழைய சியார்ராவை போலவே பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதை மீண்டும் உறுதிச்செய்ய முடிகிறது.

அதற்கேற்ப நன்கு நிமிர்ந்த தோற்றத்தில் சுவர் போன்று இருக்கும் காரின் முன்பக்கத்தில் பொனெட் மூடி ஆனது நன்கு உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்பக்கத்தில் முழு அகலத்திற்கும் எல்இடி ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாடர்ன் கார்களை போலவே, புதிய சியார்ராவிலும் மெல்லியதான வடிவில் எல்இடி ஹெட்லைட்களை எதிர்பார்க்கலாம். ஹெட்லைட்களுக்கு கீழே செங்குத்தான வடிவில் பொருத்தப்பட்ட ஃபாக் விளக்குகள் கொடுக்கப்படும்.
புதிய சியார்ரா காரின் முன்பக்கத்தில் நிறைய இடங்களில் கருப்பு நிறம் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்திலும் சக்கரங்களுக்கான வீல் ஆர்ச்சுக்கள் நன்கு அகலமானதாக வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் வழங்கப்படும். கதவு கைப்பிடிகள் யாவும் பறித்து இழுக்கக்கூடியதாக வழங்கப்படலாம். பெட்டக வடிவத்திலான கார் என்பதால், காரின் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் ஒரு கோடு செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சியார்ரா காரின் அறிமுகம் எப்போது என்பதை இன்னும் டாடா மோட்டார்ஸ் அறிவிக்கவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தின்போது அறிமுகம் செய்யப்படலாம். எலக்ட்ரிக் காராகவும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட உள்ள புதிய சியார்ராவின் தோற்றம் அதற்கேற்றாற் போன்று நன்கு மாடர்ன் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதை தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ள படம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









