1990களில் பிரபலமா இருந்த கார் மறுபடியும் லான்ச் ஆகுதா! மாருதிக்கு இந்நேரம் பயத்துல காய்ச்சலே வந்திருக்கும்!
இந்திய சாலைகளில் ஒரு காலத்தில் அதிகமாக வலம் வந்து கொண்டிருந்த கார்களில் ஒன்று டாடா சியரா (Tata Sierra). கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை, டாடா சியரா விற்பனையில் இருந்தது. இந்திய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்ட முதல் ஆஃப் ரோடு எஸ்யூவி ரக கார் இதுதான்.
இதன் காரணமாகவே டாடா சியரா, மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், கடந்த 2003ம் ஆண்டு வரை மட்டுமே டாடா சியரா விற்பனை செய்யப்பட்டது. அதன் பின் சியரா காரின் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் நிறுத்தி விட்டது.

ஆனால் கூடிய விரைவில் டாடா சியரா, புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. அனேகமாக அடுத்த மாதமே (நவம்பர்), புதிய டாடா சியரா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
புதிய டாடா சியரா கார், பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். இதன் பவர் அவுட்புட் 170 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் ஆக இருக்கலாம்.

அதே நேரத்தில் இதன் டீசல் வெர்ஷன்களில், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். இதன் பவர் அவுட்புட் 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் ஆக இருக்கலாம். மறுபக்கம் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனில், 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
வசதிகளை பொறுத்தவரையில், முன் பகுதியில் 3 திரைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக கார்களின் முன் பகுதியில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என 2 திரைகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு சில கார்களில் தற்போது 3 திரைகள் வழங்கப்படுகின்றன.
இதற்கு மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) எலெக்ட்ரிக் கார் ஒரு உதாரணம். இதே பாணியில் டாடா சியரா காரின் முன் பகுதியிலும் 3 திரைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளையும் கூட, புதிய டாடா சியரா காரில் நாம் எதிர்பார்க்கலாம்.
மேலும் ஆம்பியண்ட் லைட்டிங், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளையும் புதிய டாடா சியரா கொண்டிருக்கலாம். பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), புதிய டாடா சியரா காரின் மிக முக்கியமான வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது.
அத்துடன் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் டாடா சியரா கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விலை நிர்ணயம் சரியாக மேற்கொள்ளப்பட்டால், டாடா சியரா மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் ஆரம்ப விலை அனேகமாக 15 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கருதப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டாடா சியரா காரின் வருகை, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








