பாரத பிரதமர் மனசு வெச்சா எதுனா நடக்காம போகுமா? இதோ வேலை ஆரம்பமாயிடுச்சு... இந்தியாவில் டெஸ்லா!!
டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் நிறுவனம். இன்றைய கால உலகில் அதிகம் விற்பனையாகும் கார்களாக பல டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் உள்ளன. குறிப்பாக, பலத்த போட்டி மிகுந்த சீனாவில் கூட டெஸ்லா கார்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.
இதனாலேயே அமெரிக்காவை தாண்டி சீனாவிலும் கார் உற்பத்தி தொழிற்சாலையை டெஸ்லா அமைத்துள்ளது. ஆனால், சீனாவுக்கு அருகே உள்ள நமது இந்தியாவில் இதுவரையில் டெஸ்லாவின் வணிகம் துவங்கப்படவில்லை. இத்தனைக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூட இதுகுறித்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (Elon Musk) உடன் சிலமுறை கலந்து பேசியுள்ளார்.

ஆனால், இப்போதுவரையில் டெஸ்லாவின் இந்திய வருகை எப்போது என்பது உறுதியாக தெரியவில்லை. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் நுழைய டெஸ்லா முயற்சி செய்து வந்தாலும், இதுவரையில் அது நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம், எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து உற்பத்தி செய்து விற்பனை செய்ய டெஸ்லாவை மத்திய அரசு வலியுறுத்துகிறது.
ஆனால், டெஸ்லாவுக்கோ இந்தியாவில் பெரிய முதலீடு செய்து தொழிற்சாலை அமைக்க விருப்பம் இல்லை. சீனாவில் உற்பத்தி செய்யும் கார்களை இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்யவே விரும்புகிறது. வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் கொண்டுவந்து விற்பனை செய்வதே இந்திய அரசாங்கத்திற்கு பிடிக்காது எனும்போது, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

இதனால்தான், இந்திய அரசாங்கத்திற்கும், டெஸ்லா நிர்வாகத்திற்கும் இடையே நீண்ட வருடங்களாக இழுபறி நீடித்து வருகிறது. ஆனால், சமீபத்தில் டெஸ்லாவுக்காக சில சட்ட திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு தயாராகி வந்தது. இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
மும்பை- புனே விரைவுச்சாலையில் (Mumbai- Pune Expressway) நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், முற்றிலும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரை காணலாம். இதனால், இந்தியாவில் முதல் டெஸ்லா எலக்ட்ரிக் காராக மாடல் ஒய் அறிமுகம் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மாடல் ஒய் ஆனது டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்வதிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் கார் கிடையாது; இதைவிட குறைவான விலையில் டெஸ்லா மாடல் 3 (Model 3) விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், இந்தியாவில் முதல் கார்களாக மாடல் 3 மற்றும் மாடல் ஒய் என இரண்டையும் டெஸ்லா அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
மாடல் 3 ஆனது தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக எலக்ட்ரிக் கார் ஆகும். மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதினாலேயே உலகில் அதிக பேர் வாங்கும் கார்களுள் ஒன்றாக டெஸ்லா மாடல் 3 உள்ளது. மறுப்பக்கம், தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டிருக்கும் மாடல் ஒய் ஆனது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார் ஆகும்.
வெளிநாடுகளில் மாடல் ஒய் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் லாங் ரேஞ்ச் ஆல்-வீல்-டிரைவ் (AWD) என இரு விதமான வேரியண்ட்களில் மட்டுமே டெஸ்லா மாடல் ஒய் விற்பனை செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்டில் சிறிய அளவிலான பேட்டரியும், ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட்டில் பெரிய அளவிலான பேட்டரியும் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்குள் நுழைய டெஸ்லா பல வருடங்களாகவே முயற்சித்து வருகிறது. இதற்காக பல விஷயங்களை செய்திருப்பினும், டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை ஆகும். இதனால், இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனம் வரலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.


Click it and Unblock the Notifications









