இந்தியாவுக்கு வந்துதானே ஆகனும்! பிரதமர் மோடி கை வெச்சா தப்புமா? எலக்ட்ரிக் கார் சோதனைகளில்!!
டெஸ்லா (Tesla), உலகின் மிக பெரும் எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். ஆனால், இந்தியாவில் நுழையவே நீண்ட வருடங்களாக யோசித்து வருகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து சென்றுக் கொண்டுதான் உள்ளன. ஆனால், எந்த முடிவும் எட்டப்பட்டது போல் தெரியவில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்று சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்தியாவில் டெஸ்லா கார் சோதனையின்போது காட்சி தருவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் ஒருமுறை அடையாளம் காணப்பட்டு இருந்தது. அப்போது வெளியாகி இருந்த வீடியோவில் காட்சித்தந்ததும் டெஸ்லாவின் மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் கார் தான், இப்போதும் அதே கார் தான்.

இந்த முறை இரவில் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்ய செய்யப்பட்டுள்ளது. இரவில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டமாக இருப்பினும், கார் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளதை படங்களில் காணலாம். இந்திய சாலைகளுக்கு மாடல் ஒய் எவ்வாறு உள்ளது என சோதனை ஓட்டம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டு உள்ளதால், இந்தியாவில் டெஸ்லா நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் டெஸ்லா நுழைவதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மத்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரி ஆகும். இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது என்றால் இந்திய அரசாங்கத்திற்கு ஓகே, ஆனால் இது டெஸ்லா நிறுவனத்துக்கு ஒத்துவரவில்லை. வெளிநாட்டில் இருந்து கார்களை கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்யவே டெஸ்லாவுக்கு விருப்பம்.

ஆனால், இவ்வாறு கார்களை கொண்டுவந்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு பெரிய அளவில் இறக்குமதி வரியை விதிக்கிறது. இந்த இறக்குமதி வரி மிகவும் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் ஒருமுறை கூறியதை நினைவுக்கூறுகிறோம். இதுதொடர்பாக, இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் ஒன்றின் போது கூட எலான் மஸ்க் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை நடந்து 1 வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், சமீபத்தில் இதுதொடர்பான தனது நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் பொது பட்ஜெட்டின் மூலம் தெரிவித்தது. வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து சில சலுகைகள் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்தே, நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டங்கள் எல்லாம்.
தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும், காரின் முன்பகுதியை வைத்து இது டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் என சொல்லலாம். மறைப்புகளை தாண்டி காரின் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் ஒளிர்கின்றன. அதேபோல், காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்களும் ஒளிர்கின்றன. மாடல் ஒய் எலக்ட்ரிக் காரில் டெயில்லைட்கள் இரண்டும் லைட் பார் அல்லது க்ரோம் ஸ்ட்ரிப் (Chrome Strip) மூலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படுகிறது.
அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. காரின் பின்பக்கத்தில் மேற்கூரை சரிவாக உள்ளது. பின்பக்கத்தில் மேற்கூரை ஸ்பாய்லரில் போய் முடிகிறது. மாடல் ஒய் ஆனது டெஸ்லாவின் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் என இரு விதமான வேரியண்ட்களில் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை தான் இந்தியாவில் முதலாவதாக அறிமுகம் செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது. மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை காட்டிலும் குறைந்த விலையில் மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் முதலாவதாக மாடல் ஒய் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் டெஸ்லாவின் ஷோரூம் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா ஷோரூம்களில் பணியாற்றுவதற்கான ஆட்கள் சேர்ப்பு வேலைகள் கூட துவங்கிவிட்டன. மாடல் 3 எலக்ட்ரிக் கார் இருந்தும் இந்தியாவில் முதல் காரையே சற்று விலைமிக்கதாக அறிமுகம் செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இது இந்திய மார்க்கெட்டில் கவனத்தை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Source: Carblogindia


Click it and Unblock the Notifications








