நாளை (ஜூலை 15) டெஸ்லா இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கபோறாங்க! கார் விலை என்ன தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை நாளை (ஜூலை 15ம் தேதி) திறக்கிறது. இந்த டெஸ்லா கார்கள் இந்தியாவிற்கு எப்பொழுது வரும் என பலர் காத்திருந்த நிலையில் இந்த கார்கள் தற்போது வருவது உறுதியாகியுள்ளது. பலர் முதல் ஷோரூம் திறப்பு குறித்த தகவல்களை தேடி வரும் நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் டெஸ்லா, இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் முதன்மை நிறுவனமாக இருக்கிறது.இந்நிறுவனம் உலகில் பல நாடுகளில் ஆலைகளை அமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் தானியங்கி கார்களை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிறந்த நிறுவனமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவிற்குள் தன் காலடி தடத்தை எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை (ஜூலை 15ம் தேதி) இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறக்க திட்டமிட்டுள்ளது. மும்பையில் பந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் (BKC) என்ற பகுதியில் தனது முதல் ஷோரூமை அந்நிறுவனம் திறக்கிறது. முதற்கட்டமாக இந்நிறுவனம் நேரடியாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் வாகன தயாரிப்பு ஆலையை அமைப்பதாக ஒப்பந்தம் செய்தால் சில நிபந்தனைகளுடன் குறைந்த இறக்குமதி வரியில் கார்களை கொண்டு வரலாம் என சட்டம் பிறப்பித்துள்ள நிலையில் இதற்கான பேச்சுவார்த்தையில் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது. ஆனால் முதற்கட்டமாக 70 சதவீத இறக்குமதி வரியில் தான் டெஸ்லா கார்கள் விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் தனது கார்களுக்கான விலையை இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

டெஸ்லா நிறுவனம் முதலில் தனது மாடல் ஒய் காரை தான் இந்திய மார்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சில கார்களை இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து வைத்துள்ளது. சுமார் 6 கார்கள் டெமோ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டெஸ்லா நிறுவனம் தனது சர்வீஸ் சென்டர் மற்றும் குடோன் பயன்பாட்டிற்காக ஷகினாகா என்ற பகுதியில் உள்ள லோதா லாஜிஸ்டிக் பார்க் பகுதியில் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்துள்ளது. இந்த இடத்தில் தான் டெஸ்லா கார்கள் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டு வைக்கப்படும். மேலும் டெலிவரி செய்யப்பட்ட கார்களுக்கு சர்வீஸூம் இந்த இடத்தில் வைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை (ஜூலை 15ம் தேதி) நடக்கவுள்ள திறப்பு விழாவில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதாகவும் சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை திறப்பு விழாவின் போது தான் முழு விபரம் தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா கார்கள் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைவாக விற்பனைக்கு வரும் பட்சத்தில் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கே கடும் போட்டியை தருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









