டாடா ஷோரூம்ல டெஸ்லா காரு கிடைக்குமா?.. ரெண்டு பேரும் கூட்டணி தொடங்கிட்டாங்க.. நாடே பதறிபோயி கெடக்குது!
உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla)வும், டாடா குழுமம் (Tata Group)-ம் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணி எதற்காக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது என்பதே இங்கே பலரின் சந்தேகமாக அமைந்து உள்ளது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கு சொந்தமான ஷோரூம்களில் வைத்து, டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார்களை விற்கப் போகுதா என்கிற கேள்வியையே இந்த கூட்டணி நம் மனதில் எழுப்பி இருக்கின்றது.
ஆனால், இது எதுவும் இல்லை என்கின்றது இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள். மேலும், வேறு ஒரு காரணத்திற்காகவே இந்த கூட்டணியை இரு நிறுவனங்களும் தொடங்கி இருப்பதாகவும் அது கூறுகின்றது. அப்படி என்ன காரணம் அது? இதுபற்றிய விபரங்களையே இங்கே காண உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டெஸ்லா, டாடா மோட்டார்ஸ் உடன் கூட்டணியை மேற்கொள்ளவில்லை என்பதை நாம் இங்கே முதலில் கவனிக்க வேண்டும். மாறாக, அது டாடா குழுமத்தின்கீழ் இயங்கும் மற்ற முன்னணி நிறுவனங்களுடனேயே கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. டாடா ஆட்டோகாம்ப் (Tata AutoComp), டாடா கன்சஸ்டன்ஸி சர்வீஸ் (Tata Consultancy Services), டாடா டெக்னாலஜிஸ் (Tata Technologies) மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) உள்ளிட்ட நிறுவனங்களுடனேயே அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.
டெஸ்லாவிற்கு சப்ளையராகவும், வேறு சில சேவைகளை வழங்கக் கூடியவர்களாகவும் இந்த நிறுவனங்களே வரும் நாட்களில் இருக்கப் போகின்றன. டெஸ்லா நிறுவனம் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதிப்பதற்கான முயற்சியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. அது என்ன கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது வரையான தகவல்கள் வரை தற்போது வெளியாகிவிட்டன.

அதுமட்டுமல்ல நிறுவனம் ஷோரூம்கள் அமையும் இடத்தை தேர்வு செய்வது, பணியாட்களை நிர்ணயிப்பது என முக்கிய பணிகளைக் கூட ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே டாடா குழுமத்துடன் அதன் சில முக்கிய சேவைகளைப் பெறும் நோக்கில் டெஸ்லா நிறுவனம் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.
உலக அளவில் சப்ளையர்கள் நிறுவனத்தின் வசம் இருக்கின்ற போதிலும் டாடா குழுமத்தை டெஸ்லா நாடியிருக்கின்றது. இதற்கு பின்னால் அதிகப்படியான சலுகைகளை இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கின்றது. இந்திய அரசாங்கம் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்புப் பொருட்களைக் கொண்டிருக்கும் இ-வாகனங்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

எனவே சின்ன சின்ன பாகங்களுக்கும் இந்தியாவில் சப்ளையர்களையே டெஸ்லா நாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைத்து வாகன தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது உள்ளூர் வாகனங்களுக்கான பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும் பலனை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், டெஸ்லாவின் உற்பத்தி ஆலை எங்கு அமையப் போகின்றது என்பது இன்னும் இறுதி செய்யப்படாத ஒன்றாக உள்ளது. அதேநேரத்தில் இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் டெஸ்லா-வின் மின்சார வாகன உற்பத்தி ஆலை மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அமைய இருப்பதாக தெரிவிக்கின்றன. இங்கு அந்த ஆலை அமையவில்லை என்றால் தமிழகம் அல்லது கர்நாடகாவில் அது அமைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் முதலில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகளே தென்படுகின்றன. இவை ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்டும், பின்னாளில் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதையே சமீப காலமாக வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களும் தெரிவிக்கின்றன.
Source: ET


Click it and Unblock the Notifications









