டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை எங்கு அமைய போகுது? இந்த மாநிலத்துக்குதான் முன்னுரிமையா!
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் டெஸ்லா (Tesla). நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பது இப்போது உறுதியாகி இருக்கின்றது. இதற்கான பணிகளில் அது மிக தீவிரமாக களமிறங்கி இருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தற்போது நாட்டில் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் பணிகளைக் கூட தொடங்கிவிட்டனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல அது தற்போது உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான நிலத்தைத் தேடும் பணிகளையும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெஸ்லா நிறுவனத்தின் நீண்ட இலக்காக இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைத்து நாட்டிலேயே அதன் வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்பது இருக்கின்றது. இந்த திட்டத்தையே தற்போது அந்நிறுவனம் முன்னெடுக்கத் தொடங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி ஆலை எங்கு அமைய போகின்றது என்கிற கேள்வி பலருக்கும் எழும்பி இருக்கின்றது.

ஏனெனில், கடந்த நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா என இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் சில இந்த நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பை வழங்கின. சலுகைகளை வழங்கவும் அவை முன் வந்தன. இந்த நிலையிலேயே இந்த மூன்று மாநிலங்களில் ஒற்றை மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்கும் பிளானில் டெஸ்லா இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
தமிழகம், கர்நாடகா இந்த இரண்டு மாநிலங்களைக் காட்டிலும் மஹாராஷ்டிரா-வை நிறுவனம் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தில் இருப்பதாகவே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹாராஷ்டிராவை போலவே இந்த நிறுவனத்தை வளைத்துப் போட பல்வேறு சலுகைகளை வழங்க தயாராக இருக்கின்றன தமிழகம் மற்றும் கர்நாடகா போன்ற இந்தியாவின் பிற மாநிலங்கள்.
ஆகையால், நிறுவனத்தின் பிளானில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் ஏற்கனவே இந்த நிறுவனத்தின் அலுவலகம் புனேவில் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தகுந்தது. எனவே, இதை பயன்படுத்தும்பட்சத்தில் நிறுவனத்தின் இந்தியா வருகை எண்ணத்தை அதி-விரைவாக செயல்படுத்திக் கொள்ள முடியும். எனவேதான், சிலர் கட்டாயம் நிறுவனத்தின் ஆலை மஹாராஷ்டிராவில் அமையும் என எதிர்பார்க்கின்றனர்.
ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டிருக்கும் தகவலிலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. சக்கன் மற்றும் சிக்ஹலி எனும் பகுதியிலேயே நிறுவனத்திற்கு ஆலை அமைக்க மஹாராஷ்டிரா அரசாங்கம் இடம் ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அது வெளியிட்டு இருக்கும் தகவலில் கூறப்பட்டு இருக்கின்றது. புனே-விற்கு அருகாமலேயே இந்த பகுதி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களின் ஆலைகளும் இங்கேயே அமைந்திருக்கின்றன. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவனங்கள் இங்கேயே ஆலையை அமைத்திருக்கின்றன. இதுமட்டுமல்ல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தின் ஆலையும் இங்கேயே அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டெஸ்லா அதன் கால் தடத்தை நாட்டில் பதிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த நிறுவனம் இறக்குமதி செய்தும் வாகனங்களை விற்பனைச் செய்யும் பிளானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








