இந்த ஊர்க்காரங்கள இனி கையிலயே பிடிக்க முடியாது! ஏசி வசதியுடன் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் ஓடப்போகுது!
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றுதான் பிஎம்-இபஸ் சேவா திட்டம் (PM-eBus Sewa Scheme). மத்திய அரசால், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஎம்-இபஸ் சேவா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) எண்ணிக்கையை அதிகரிப்பதுதான், இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ், மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில், 100 எலெக்ட்ரிக் பஸ்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன. அவை அனைத்தும் ஏசி வசதியுடன் கூடிய எலெக்ட்ரிக் பஸ்களாக இருக்கும்.

பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த 100 ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள், வரும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தானே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான நரேஷ் மக்ஸே இந்த தகவலை தெரிவித்துள்ளார். தானே நகரின் மக்கள் தொகை வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.
எனவே பிஎம்-இபஸ் சேவா திட்டத்தின் கீழ், தானே நகருக்கு இன்னும் கூடுதலான எலெக்ட்ரிக் பஸ்கள் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நரேஷ் மக்ஸே தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் கூடுதலான எலெக்ட்ரிக் பஸ்களை தானே நகருக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நரேஷ் மக்ஸே வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிஎம்-இபஸ் சேவா திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டருக்கு வழங்கப்படும் மானிய தொகை 24 ரூபாயை, ஒரு கிலோ மீட்டருக்கு 29 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் அவர் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் பிஎம்-இபஸ் சேவா திட்டத்தில் செய்யப்பட வேண்டிய மேலும் ஒரு சில மாற்றங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
இதன்படி பிஎம்-இபஸ் சேவா திட்டத்தின் கீழ், தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் பஸ்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும் என்ற சூழல் உள்ளது. இதனை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 160 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் குறைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். குறிப்பாக டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரு நகரங்களில், காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக ஏராளமான எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் இன்னும் எலெக்ட்ரிக் பஸ்கள் போதுமான எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை. டெல்லி போன்ற வட இந்திய மாநிலங்கள் அளவிற்கு தமிழக பெருநகரங்கள் இன்னும் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்படவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக தற்போதில் இருந்தே அதிக அளவிலான எலெக்ட்ரிக் பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








