31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்ல 6 ஏர்பேக்கா! விலை எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ஷோரூம்ல இருப்பீங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் முன்பெல்லாம் புதிய கார் வாங்கும்போது, விலை எவ்வளவு? ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்? என்பதை மட்டும்தான் மிகவும் முக்கியமாக பார்ப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றுடன், பாதுகாப்பு (Safety) எந்த அளவிற்கு கிடைக்கும்? என்பதையும் கூட, வாடிக்கையாளர்கள் கவனிக்க தொடங்கியுள்ளனர்.
இந்திய கார் வாடிக்கையாளர்கள் மத்தியில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்புகள் நடத்திய மோதல் சோதனைகளில் கார் எத்தனை ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது? என்பதையும் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர்.

எனவே இந்தியாவில் ஒரு காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதில், குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி அமைப்புகள் வழங்கும் பாதுகாப்பு ரேட்டிங், மிகவும் முக்கியமான ஒரு காரணியாக மாறியுள்ளது. அத்துடன் கார்களில் எத்தனை ஏர்பேக்குள் வழங்கப்படுகின்றன? என்பதையும் வாடிக்கையாளர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
முன்பெல்லாம் ஒரு காரின் டாப் வேரியண்ட்களில்தான் அதிக எண்ணிக்கையிலான ஏர்பேக்குகள் வழங்கப்படும். ஆரம்ப நிலை வேரியண்ட்களில் குறைந்த எண்ணிக்கையிலான ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பெரும்பாலான கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

இந்த வரிசையில் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் கார்களின் பட்டியலில் தற்போது டொயோட்டா க்ளான்சாவும் (Toyota Glanza) இணைந்துள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார் ஆகும்.
இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. E, S, G மற்றும் V என டொயோட்டா க்ளான்சா கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், முன்பு G மற்றும் V ஆகிய 2 வேரியண்ட்களில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டன. ஆனால் இனி E மற்றும் S ஆகிய வேரியண்ட்களிலும், அதே எண்ணிக்கையிலான ஏர்பேக்குகள் வழங்கப்படும். இங்கே மற்றொரு ஆச்சரியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா.
அதாவது சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ காரை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து, க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. தற்போது டொயோட்டா க்ளான்சா காரில் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு விட்டன.
ஆனால் மாருதி சுஸுகி பலேனோ காரில் இந்த வசதி கிடையாது. டொயோட்டா க்ளான்சா காரை போலவே, மாருதி சுஸுகி பலேனோ காரும், 4 வேரியண்ட்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை சிக்மா (Sigma), டெல்டா (Delta), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) ஆகியவை ஆகும்.
இதில், ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சிக்மா மற்றும் டெல்டா வேரியண்ட்களில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் டொயோட்டா க்ளான்சா காரை தொடர்ந்து, அடுத்தபடியாக மாருதி சுஸுகி பலேனோ காரிலும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கே மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏர்பேக்குகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதால், டொயோட்டா க்ளான்சா காரின் விலை அதிகரிக்கப்படவில்லை. தொடர்ந்து பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும். டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.90 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா க்ளான்சா கார் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது. இந்த காரின் வேரியண்ட்களிலேயே அதிகமான மைலேஜ் வழங்க கூடியது சிஎன்ஜி வேரியண்ட்கள்தான். அவற்றின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் டொயோட்டா க்ளான்சா தற்போது மிகவும் பாதுகாப்பான காராகவும் மாறியுள்ளது. இது வரும் காலங்களில் டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கை உயர உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








