மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைச்சதே டொயோட்டாவுக்கு தான் போல... ஒரே மாதத்தில் விற்பனை 20% அதிகரிப்பு!!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (TKM) 2025 அக்டோபரில் பெரும் விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் கால விற்பனையால் உந்தப்பட்டு, உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 2025 அக்டோபரில் டொயோட்டா மொத்தம் 42 ஆயிரத்து 892 கார்களை நிறுவனம் விற்றுள்ளது.
இது 2024 அக்டோபரில் விற்கப்பட்ட 30 ஆயிரத்து 845 கார்களுடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு ஆண்டு 39% வளர்ச்சியை காட்டுகிறது. அதேபோல், 2025 செப்டம்பரில் விற்கப்பட்ட 31 ஆயிரத்து 91 டொயோட்டா கார்களுடன் ஒப்பிடுகையிலும், 2025 அக்டோபரில் 38% வளர்ச்சி பதிவாகி உள்ளது.

பண்டிகைக் காலம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 திருத்தங்களால் உருவான மேம்பட்ட நுகர்வோர் மனநிலை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. டொயோட்டாவின் கடந்த அக்டோபர் மாத மொத்த 42,892 விற்பனை எண்ணிக்கையில், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 40,257 கார்களும், உலகச் சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 2,635 கார்களும் அடங்குகின்றன.
ஏற்கனவே கூறியதுபோல், இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வாடிக்கையாளர் ஈடுபாடு, அதிகரித்த பண்டிகைக் கால தேவை, மற்றும் சமீபத்திய புதிய தயாரிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பு ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஏரோ எடிஷன் மற்றும் 2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த புதிய எடிஷன்கள், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் அம்ச மேம்பாடுகளுடன், தற்போது டொயோட்டா டீலர்ஷிப்களில் முன்பதிவு மற்றும் டெலிவிரிக்கு கிடைக்கின்றன. இதன் மூலம், நகர்ப்புற எஸ்யூவி மற்றும் பிரீமியம் எஸ்யூவி கார்கள் பிரிவுகளில் டொயோட்டாவின் நிலை மேலும் வலுப்பெற்றுள்ளது. மக்களும் புதிய டொயோட்டா ஸ்பெஷல் எடிசன் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை, சேவை மற்றும் யூஸ்டு-கார் வணிகத்தின் துணைத் தலைவர் வரீந்தர் வாத்வா கடந்த அக்டோபர் மாதச் செயல்பாடு குறித்துப் பேசுகையில், "வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் சீரான செயல்பாட்டு ஒத்திசைவு ஆகியவையே இந்த வலுவான வளர்ச்சிக்குக் காரணம்" என்றார்.

மேலும், சாதகமான பொருளாதாரச் சூழல் மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சந்தை நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும், இது கார் வாங்குவது குறித்த யோசனைகள் மற்றும் விற்பனை மாற்றங்களை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய தயாரிப்புகளுடன், சண்டிகரில் புதிய சான்றளிக்கப்பட்ட யூஸ்டு-கார் ஷோரூமை திறந்து, யூஸ்டு வாகனப் பிரிவிலும் டொயோட்டா தனது அடியைப் பதித்துள்ளது.
இது முழுமையான மொபிலிட்டி சுற்றுச்சூழல் அமைப்பை வழங்கும் டொயோட்டா நிறுவனத்தின் நோக்கத்திற்கு இணங்க உள்ளது. ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் உற்பத்தி செயல்பாடுகள் கர்நாடகாவின் பிடாடி உற்பத்தி தொழிற்சாலையிலேயே தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த தொழிற்சாலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 3,42,000 கார்கள் ஆகும்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர், லெஜெண்டர், காம்ரி ஹைப்ரிட், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹிலக்ஸ் போன்ற முக்கிய டொயோட்டா கார் மாடல்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் லேண்ட் க்ரூஸர் 300 போன்ற விலையுயர்ந்த கார்களும் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு இந்த தொழிற்சாலையில் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜப்பானின் மற்றொரு பிரபலமான கார் நிறுவனமான சுஸுகி உடன் இணைந்து டொயோட்டா செயல்படுகிறது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இதனால், மாருதி சுஸுகியின் உதவியில் டொயோட்டா நிறுவனம் கவனிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்திலும் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









