வர மார்ச் 11 அன்றைக்கு தரமான சம்பவம் நடக்க போகுது.. காரோட சைடு போஸ்ஸே வேற லெவல்ல இருக்கு..
டொயோட்டா (Toyota) நிறுவனம் வருகின்ற மார்ச் மாதம் 11 ஆம் தேதி ஓர் புதுமுக கார் மாடலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் அந்த புதுமுக கார் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படம் வாயிலாக டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கும் அந்த வாகனம் ஓர் கூபே காம்பேக்ட் எஸ்யூவி (Coupe Compact SUV) ரக கார் மாடல் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், இது 2022 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்ட பிஇசட் கான்செப்ட் (bZ Concept)-இன் உற்பத்தி வெர்ஷனாக இருக்கலாம் என கணிக்கப்பட்டு இருக்கின்றது. டொயோட்டா கார் பிரியர்கள் பலரின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் கார் மாடலாக இந்த கான்செப்ட் மாடல் உள்ளது.

இதனை நிறுவனம் அடுத்த மாதம் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது டொயட்டா கார் காதலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் உற்பத்தி பணிகள் தொடங்கி, உலக சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் அது நிறுவனத்தின் மூன்றாம் எலெக்ட்ரிக் கார் மாடலாக மாறும்.
டொயோட்டா நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலைகூட இந்தியாவில் விற்பனைக்கு வழங்கவில்லை. விரைவில் நிறுவனம் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட அர்பன் க்ரூஸர் இவி-யே நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கப் போகின்றது.
அதேவேளையில் உலக சந்தைக்காக இந்த நிறுவனம் மிகப் பெரிய பிளானை வகுத்து இருக்கின்றது. 2026ம் ஆண்டிற்குள் அது ஆறு புதுமுக மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இதில் முதல் ஒன்றாகவே பிஇசட் இருக்கப்போகின்றது. இது நிறுவனத்தின் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் படமும் இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. இந்த கார் பன்முக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாகவே விற்பனைக்கு வர இருக்கின்றது. அனைத்து வீல்களும் இயங்கும் திறன், 12.3 அங்குல டச் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களே இடம் பெற்றிருக்கும் என தெரிகின்றது.
இதுமட்டுமல்ல, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த இ-காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. பேட்டரி பேக்கை பொருத்த வரை 49 kWh மற்றும் 61 kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்களே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியீட்டின்போது பிஇசட் கார் மாடல் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டே டொயோட்டா 2026 ஆம் ஆண்டிற்கு 6 புதுமுக மின்சார கார்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவற்றிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








