ரோட்ல ஓடிகிட்டு இருக்கும்போதே திடீர் திடீர்னு நிக்கும் டொயோட்டா கார்கள்! அதிர்ச்சியில் உரிமையாளர்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காருக்கு டொயோட்டா நிறுவனம் தற்போது ரீகால் (Recall) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி பார்த்தால், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களில், எரிபொருள் அளவு தவறாக காட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக எரிபொருள் அளவு குறைவாக இருந்தால் எரியக்கூடிய லைட் எரிவதில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எவ்வளவு எரிபொருள் உள்ளது? என்பதில் டிரைவருக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன.

ஒரு சில சமயங்களில் எரிபொருள் இல்லாமல் கார் நின்று விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த பிரச்னையை சரி செய்து தருவதற்காகவே டொயோட்டா நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 11,529 டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களில் இந்த பிரச்னை இருக்கலாம் என கருதப்படுகிறது.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியில் இருந்து 2025ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களில் பிரச்னை இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை எல்லாம் திரும்ப அழைக்கும் பணியில் டொயோட்டா நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

ஒருவேளை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், டொயோட்டா நிறுவனம் அதை சரி செய்து தரும். டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாக இந்த பணி நடைபெறும். ஒருவேளை பிரச்னை இருப்பது தெரிய வந்தால், அது இலவசமாகவே சரி செய்து தரப்படும். வாடிக்கையாளர்கள் கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை.
டொயோட்டா டீலர்ஷிப்கள் தற்போது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு இந்த பிரச்னை குறித்து பேசி வருகின்றனர். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்பை அணுகலாம். முன்னதாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக 39,506 மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாருதி சுஸுகி நிறுவனமும், க்ராண்ட் விட்டாரா காருக்கு சமீபத்தில் ரீகால் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கும் ரீகால் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி ஆகிய 2 நிறுவனங்கள் இடையே ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள கூட்டணியின் அடிப்படையில், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் க்ராண்ட் விட்டாரா ஆகிய 2 கார்களும் முக்கியமான பாகங்களை பகிர்ந்து கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் உற்பத்தி நிறுவனங்கள் ரீகால் அறிவிப்பை வெளியிடுவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். எனவே கார் உரிமையாளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இலவசமாகவே சரி செய்து தரப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








