அந்த நிறுவனம் இவ்ளோ பணத்தை கொட்ட போகுதா! உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு! டாலர் மழை பெய்ய போறது உறுதி!
வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) தயாரிப்பில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் உலக புகழ் பெற்று விளங்கி வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் (Electric cars), எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் எலெக்ட்ரிக் பஸ்கள் (Electric Buses) போன்ற வாகனங்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கே போட்டியாக கருதப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தூத்துக்குடி (Thoothukudi) பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இதுதான், வியட்நாமிற்கு வெளியே வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சாலை ஆகும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தூத்துக்குடி தொழிற்சாலை 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வின்ஃபாஸ்ட நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. தற்போதைய நிலையில் இங்கு வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) என 2 எலெக்ட்ரிக் கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் இந்த தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியும். அவசியம் ஏற்பட்டால், இந்த உற்பத்தி திறனை ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்களாக அதிகரித்து கொள்ள முடியும். இந்த சூழலில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூடிய விரைவில் தனது தூத்துக்குடி தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன், வின்ஃபாஸ்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தமிழ்நாடு அரசு, வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவுள்ளது. தூத்துக்குடியில் தற்போது உள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகிலேயே இந்த 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இங்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவுள்ளது. விரிவாக்கம் செய்யப்படவுள்ள இந்த தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலமாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த கூடுதல் முதலீடு, தென் தமிழகத்தை வளமாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. இந்த முதலீட்டை பெறுவதற்காக முயற்சி எடுத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியதுதான். வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, புதிய தொழிற்சாலைக்கு தேவையான அனுமதிகளை பெறுதல் மற்றும் மின்சாரம், குடிநீர், கழிவு மேலாண்மை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு உதவி செய்யவுள்ளது.
இதற்கிடையே வின்ஃபாஸ்ட் நிறுவனம் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதுடன் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க தனது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் பணிகளிலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில், ஒட்டுமொத்தமாக 24 டீலர்ஷிப்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக 35 ஆக உயர்த்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தூத்துக்குடி தொழிற்சாலை இந்தியாவிற்கானது மட்டுமல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது மிக முக்கியமான ஏற்றுமதி மையமாகவும் செயல்படவுள்ளது. அதாவது இங்கு உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








