அம்பாசிடர் கார் மட்டுமல்ல.. இந்த காரும் மீண்டும் விற்பனைக்கு வர போகுது.. அடிமாட்டு விலைக்கு வர போகுதா!!
இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருந்த கார் மாடல்களில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 2026 ஆம் ஆண்டு அல்லது 2027 ஆம் ஆண்டிற்குள் இது விற்பனைக்கு வந்துவிடும் என்றே தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
இருப்பினும் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என்கிற அதீத நம்பிக்கையில் அம்பாசிடர் கார் காதலர்கள் உள்ளனர். இந்த நிலையிலேயே தற்போது வேறொரு தகவல் இணையத்தில் புதிதாக வெளியாகி உள்ளது. அம்பாசிடரை போல இந்தியாவில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருந்த கார் மாடல் ஒன்று மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் மாடலே அது ஆகும். இதன் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 2022 ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், அது விற்பனையிலும் இல்லை. யூஸ்டு கார் மார்கெட்டில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இங்கு இந்த காருக்கு இப்போதும் டிமாண்ட் சூப்பராகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால், கார் ஆர்வலர்கள் சிலரின் விருப்பமாக இந்த கார் மாடல் உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த காருக்கான டிமாண்ட் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, போலோ ஜிடி டிஎஸ்ஐ (Polo GTI TSI) போன்ற வேரியண்டுகளுக்கு சந்தையில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த வேரியண்டை வைத்திருக்கும் சிலர் தாங்கள் வாங்கிய தொகைக்கே இதை விற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவலாக, இந்திய சாலையில் 4 லட்சத்திற்கும் அதிகமான போலோ கார்கள் தற்போது இயங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்கள் மொத்தமாக 7 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் சாலையில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில், 60 சதவீத பங்கினை போலோ கார் மாடலே கொண்டிருக்கின்றது. இந்த அளவிற்கு வரவேற்புமிக்க கார் மாடலையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றியது.
இந்த நிலையிலேயே போலோ காரை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் திட்டத்தில் ஃபோக்ஸ்வேகன் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அடிமாடுகளைப் போல ரூ. 6 லட்சம் அல்லது அதற்கும் குறைவான ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
இவ்வாறு அது மலிவு விலையில் விற்பனைக்கு வரும் எனில் கட்டாயம் இந்த கார் மீண்டும் இந்தியாவில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாக நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தியாவில் ஹேட்ச்பேக் கார் மாடல் பிரிவு மூழ்கும் கப்பலைப் போன்ற பிரிவாக மாறிவிட்டது.
அதேவேளையில், எஸ்யூவி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த பிரிவை மையப்படுத்தி ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. மேலும், கோல்ஃப் ஜிடிஐ மற்றும் டிகுவான் ஆர்-லைன் போன்ற கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் அது தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ ஹேட்ச்பேக் காரின் வருகையை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த கார் மாடலை எதிர்பார்ப்பதற்கு பதிலாக கோல்ஃப் ஜிடிஐ நீங்கள் எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் போலே விற்பனைக்கு வந்தாலும் ஓரளவிற்கு மார்க்கெட்டை தன் பக்கம் வளைத்துப் போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








