நாடே எதிர்பார்த்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் விலை இதுதானா? 100km/h வேகம் தான் எடுத்தவுடனே...
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விலைமிக்க மற்றும் செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் காராக வெளிநாடுகளில் சிறப்பான விற்பனையில் இருக்கும் கோல்ஃப் ஜிடிஐ கார், எம்கே 8.5 கோல்ஃப் ஜிடிஐ (Mk 8.5 GTI) என அழைக்கப்படுகிறது. ரூ.53 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் பல வெளிநாடுகளில் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் கார்களுள் கோல்ஃப் ஜிடிஐ ஒன்றாகும். நம் நாட்டு சந்தையை பொறுத்தவரையில் சற்று விலையுயர்ந்த காராக இருப்பினும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கோல்ஃப் ஜிடிஐ காருக்கு நிறைய கஸ்டமர்கள் உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் இந்த காருக்கு வரவேற்பு கிடைக்குமா கிடைக்காதா என்கிற சந்தேகத்துடனே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்கி உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் இவ்வாறான ஒரு சந்தேகத்தில் இருப்பது, கோல்ஃப் ஜிடிஐ காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்த விதம் வெளிக்காட்டுகிறது. ஏனெனில், கோல்ஃப் ஜிடிஐ காரை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உற்பத்தி செய்ய போவது இல்லை. இன்னும் சொல்லப் போனால், பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய போவதும் இல்லை.
முற்றிலுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, மொத்தமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்து கொண்டுவரப்படும் கார்களுக்கு இந்திய அரசாங்கம் அதிகப்படியான இறக்குமதி வரியை விதிப்பது வழக்கம். அதனால்தான், புதிய கோல்ஃப் ஜிடிஐ காரின் விலை சுமார் ரூ.53 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். மொத்தமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவருவதினாலேயே, அதிக எண்ணிக்கையிலான கோல்ஃப் ஜிடிஐ கார்களை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இல்லை. இந்த 2025ஆம் ஆண்டில் 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டும் விற்பனை செய்யலாம் என ஆரம்பத்தில் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டது.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களும் ஏற்கனவே இந்தியாவில் புக் ஆகிவிட்டன. எதிர்பார்த்ததை காட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இரண்டாம் கட்டமாக 100 கோல்ஃப் ஜிடிஐ கார்களுக்கு முன்பதிவுகளை ஏற்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரேனைடிலா கருப்பு, கிங்க்ஸ் ரெட், மூன்ஸ்டோன் கிரே மற்றும் ஆரிக்ஸ் வெள்ளை என மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் புதிய கோல்ஃப் ஜிடிஐ கார் கிடைக்கும். இந்த விலைமிக்க ஃபோக்ஸ்வேகன் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட உள்ளது. மற்றப்படி, டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
அதிகப்பட்சமாக 265 பிஎஸ் மற்றும் 370 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பெடில் ஷிஃப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய கோல்ஃப் ஜிடிஐ காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2016ஆம் ஆண்டில் போலோ ஜிடிஐ கார் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு இந்தியாவில் களமிறக்கப்பட்டு உள்ள 2வது ஃபோக்ஸ்வேகன் ஜிடிஐ கார், கோல்ஃப் ஜிடிஐ ஆகும். ஆனால், நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் சற்று அதிகப்படியான விலையில் கோல்ஃப் ஜிடிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலுமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படுவதால், அதற்கேற்ப இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் காரின் விலையும் அதற்கேற்ப அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









