1970களில் உருவாக்கிய காரை இப்பவாச்சும் இந்தியா கொண்டுவர தோணுச்சே!! ஃபோக்ஸ்வேகனின் 50 வருட தரமான கார்
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அடுத்ததாக கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காருக்கான ப்ரீ-புக்கிங்ஸ் (Pre-Bookings) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து உலகளவில் பிரபலமான கார்களுள் ஒன்று, கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) ஆகும். 1970களில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த ஃபோக்ஸ்வேகன் கார் ஆனது பவர்ஃபுல்லான என்ஜின் உடன் செயல்திறன்மிக்கதாக உள்ளது. இத்தகைய காரை தான் அடுத்ததாக இந்தியாவிற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கொண்டுவருகிறது.

ஏற்கனவே அறிவித்தப்படி, இன்று (மே 5) கோல்ஃப் ஜிடிஐ காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவில் இந்த காரை வாங்க விரும்புவோர் டோக்கன் தொகையை செலுத்தி புக் செய்வதை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்க துவங்கியுள்ளது. இந்த காரின் அறிமுகம் இந்த 2025 மே மாத இறுதியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கோல்ஃப் ஜிடிஐ காரை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உற்பத்தி செய்ய போவதில்லை. முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் கார்களுக்கு இந்திய அரசாங்கம் அதிகப்படியான வரியை விதிக்கிறது. இதனால், இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ காரின் விலையை சற்று அதிகமாகவே எதிர்பார்க்க முடியும்.

மேலும், இதனாலேயே குறைந்த எண்ணிக்கையிலான கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே முதற்கட்டமாக விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, முதற்கட்டமாக 250 கோல்ஃப் ஜிடிஐ கார்களுக்கான முன்பதிவுகளை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் ஏற்றுக் கொள்ளும். அதன்பின் இந்த காருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அடுத்தக்கட்ட புக்கிங்குகள் துவங்கப்படும்.
இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ கார்களை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. அப்போதும் கூட, குறிப்பிட்ட சில ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் ஷோரூம்களில் மட்டுமே இந்த காரின் டெலிவிரிகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டில் மூன்று கதவுகளை மட்டுமே கொண்ட போலோ ஜிடிஐ (Polo GTI) கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்து, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் 2வது ஃபோக்ஸ்வேகன் ஜிடிஐ கார், புதிய கோல்ஃப் ஜிடிஐ ஆகும். 1970களில் இருந்து வெளிநாடுகளில் விற்பனையில் இருந்தாலும், இந்தியாவில் முதல்முறையாக கோல்ஃப் ஜிடிஐ அறிமுகம் செய்யப்படுகிறது.
கோல்ஃப் ஜிடிஐ காரில் 2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 265 எச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினின் இயக்க ஆற்றலை இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது.
ஏற்கனவே கூறியதுபோல், செயல்திறன்மிக்க காரான கோல்ஃப் ஜிடிஐ-இல் எலக்ட்ரானிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய டிஃப்ரென்ஷியல் லாக் (Differential Lock) முன் சக்கரங்களுக்கு மத்தியில் வழங்கப்படுகிறது. 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரின் டாப்-ஸ்பீடு 250km/h ஆகும். இந்த காரில் 18-இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இதனை 19-இன்ச் ஆகவும் பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செயல்திறனில் மட்டுமின்றி, பார்ப்பதற்கும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ ஆனது ஸ்டைலிஷான கார் ஆகும். இதனாலேயே இந்த காருக்கு வெளிநாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர். இத்தகைய காரை இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம், இந்திய சந்தையில் தனது இருப்பை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இருப்பினும், முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ஃப் ஜிடிஐ கார்களை இந்தியாவிற்கு கொண்டுவர போவதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு காரின் விலையை அதிகரிக்கக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








