ஐஐடி மெட்ராஸில் துவங்கிய பயணம், வண்டி இன்னமும் நிக்காம ஓடுது! தமிழராய் ஒவ்வொருத்தரும் பெருமை பட வேண்டிய தருணம்
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), உலகின் பழமையான மற்றும் பிரபலமான சொகுசு கார் நிறுவனம். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கார் நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் எவ்வாறு இணைந்தன, அதற்கு முன்னர் அவை எந்தெந்த நிறுவனங்கள் கைகளுக்கு மாறின, பின்னர் எவ்வாறு கடைசியாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கீழ் வந்தன என்பதை எல்லாம் ஏற்கனவே ஒரு தொகுப்பில் விரிவாக பார்த்து இருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்கள் இணைந்ததற்கும், அவை இன்னமும் செயல்பட்டு வருவதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். ஏனெனில், ஆரம்பத்தில் இந்த இரு நிறுவனங்களிலும் முதலீடு செய்து குறிப்பிட்ட பங்குகளை பெற்ற டாடா நிறுவனம், அதன்பின் பெரும்பான்மையான பங்குகளை சொந்தமாக்கி இரு நிறுவனங்களையும் இணைத்து நிர்வகிக்க ஆரம்பித்தது.

இருப்பினும், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்ட்களில் இருந்து தனித்தனியாக தான் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், இரு நிறுவனங்களையும் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் தான் நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச சந்தையிலும் ஒட்டுமொத்தமாகவே ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் தான் கவனித்து வருகிறது.
டாடா மோட்டார்ஸ் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை மேம்பட்டு உள்ளதாக நமது செய்தித்தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம். இருப்பினும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சிஇஒ (CEO) ஆக வெளிநாட்டினரையே டாடா குழுமம் நியமித்து வந்தது. இந்த நிலையில், முதல்முறையாக இந்தியர் ஒருவர் சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுவும், நம் தமிழ்நாட்டை சேர்ந்த பிபி பாலஜி (PB Balaji) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, பிரிட்டிஷ் நாட்டில் தோன்றி உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை தமிழர் ஒருவர் நிர்வகிக்க உள்ளார். 35 வருடங்களாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் பணியாற்றி, கடந்த 3 வருடங்களாக சிஇஓ பதவி வகித்துவந்த பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அட்ரியன் மார்டெல் (Adrian Mardell) இடத்தில் பிபி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிபி பாலாஜியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவர் ஐஐடி மெட்ராஸில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் பட்டம் பெற்றவர் ஆவார். அதன்பின், ஐஐஎம் கல்கத்தா (IIM Calcutta) கல்வி நிறுவனத்தில் நிர்வாக மேலாண்மை படிப்பை பயின்று பட்டம் பெற்ற கையோடு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பிரபலமான 'யுனிலெவர்' (Unilever) நிறுவனத்தில் 1995ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார்.

அடுத்தடுத்த வருடங்களில் பணியில் மெல்ல மெல்ல உயர்ந்தவர் சிங்கப்பூர், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து என வெவ்வேறான நாடுகளில் யுனிலெவர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக பணியாற்றினார். அதன்பின், 2017ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்த பிபி பாலாஜி அவர்கள் தனது திறமையினால் டாடா குழுமத்தில் அங்கம் வகிக்கும் டாடா எலக்ட்ரிக் வாகனங்கள், ஏர் இந்தியா (Air India) மற்றும் டைட்டன் (Titan) உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்து தற்போது டாடா க்ரூப்பின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவரின் உயரிய பொறுப்பான சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக உள்ளது என்றாலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் பயணத்தில் முக்கியமான கட்டத்தில் உள்ளது. ஏனெனில், வருகிற 2026ஆம் ஆண்டு முதல் ஜாகுவார் பிராண்டில் முழுவதுமாக எலக்ட்ரிக் கார்களை மட்டுமே புதியதாக அறிமுகம் செய்வது என்கிற திட்டத்துடன் டாடா க்ரூப் உள்ளது. அதன் ஒருபகுதியாகவே தற்போது பிபி பாலாஜியை ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ ஆக நியமித்துள்ளனர் என கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications









