கடைசியில் சீனாவிடமே கையேந்துவது தான் ஒரே வழியா? எலக்ட்ரிக் கார் விற்பனை மொத்தமா படுக்க போகுது!!
உலகில் பல உலோகங்கள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் இதுவரை கேள்வியே படாத உலோகங்கள் எல்லாம் கூட பல்வேறு தொழில்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, தொடர்ந்து அதிகரித்துவரும் தேவைக்காக புது, புது தனிமங்களை உருவாக்கி, அதன் மூலம் உலோகங்களை உருவாக்கும் ஆய்வு கண்டுப்பிடிப்புகளும் ஒருபக்கம் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலமாகவே, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தன என்பது பெரிய கதை ஆகும். எலக்ட்ரிக் வாகனங்களினால் பல நன்மைகள் உள்ளன. அதேநேரம் சில அசவுகரியங்களும், சில பற்றாக்குறைகளும் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு அதி வலிமைமிக்க காந்தகங்கள் மிக அவசியமான ஒன்றாக அமைகின்றன. இந்த வகை காந்தகங்கள் உலகிலேயே மிகவும் அரிதாக கிடைக்கும் டெர்பியம் (Terbium), நியோடிமியம் (Neodymium), டிசிப்ரோசியம் (Dysprosium) போன்ற தனிமங்கள் மூலமாக உற்பத்தி செய்யப் படுகின்றன.

காந்தகங்கள் மட்டுமின்றி, இந்த தனிமங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு பல விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டோமொபைல் வாகனங்கள் 120 வருடங்களுக்கு முன் கண்டுப்பிடிக்கப்பட்டதில் இருந்தே இவ்வாறான உலகின் அரிய வகை தனிமங்கள் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றாலும், தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யவே இவை மிகவும் அதிகமாக தேவைப்படுகின்றன.
எந்த அளவிற்கு அதிகம் என்றால், ஒரு பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்தை உற்பத்தி செய்வதற்கு 100 கிராம் அரிய வகை தனிமங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பெட்ரோல் & எலக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கக்கூடிய ஹைப்ரீட் (Hybrid) வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு சராசரியாக 500 கிராம் அரிய வகை தனிமங்கள் வாகனத்தை பொறுத்து தேவைப்படுகின்றன.

அதுவே, ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை உற்பத்தி செய்ய சராசரியாக சுமார் 800 கிராம் அரிய வகை தனிமங்கள் தேவைப்படுகின்றன. அதாவது, பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் 8 மடங்கு அதிக அரிய வகை தனிமங்கள் தேவைப்படுகின்றன. 800 கிராம் என்பது மிகவும் அதிகம் கிடையாதே என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இந்த அரிய வகை தனிமங்கள் கிடைப்பதில்தான் பிரச்சனையே.
இயற்கையாக கிடைக்கும் இந்த தனிமங்கள் அதிகமாக சீனாவில் இருந்துதான் பெறப்படுகின்றன. இத்தனை வருஷமாக உலக நாடுகளுக்கு விற்பனை செய்துவந்த சீன அரசாங்கம் திடீரென இந்த தனிமங்களை தங்களது நாட்டில் இருந்து கொண்டு செல்ல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேற்கூறப்பட்ட மூன்று தனிமங்கள் உள்பட மொத்தம் 17 அரிய வகை தனிமங்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அரிய தனிமங்களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமத்தை கொண்டிருக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதத்தில் சீன அரசு அறிவித்தது. இது நேரடியாக பல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வணிகங்களை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் உருவாக்க முதலீடு செய்த நிறுவனங்களுக்கு சீனாவின் இந்த அறிவிப்பு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் எலக்ட்ரிக் மோட்டார்களில் அதிக செயல்திறனை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் பவர்ஃபுல்லான காந்தகங்கள் இந்த அரிய வகை தனிமங்களை கொண்டுதான் உருவாக்கப்படுகின்றன. எலக்ட்ரிக் மோட்டார் மட்டுமின்றி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், வாகனத்தில் பொருத்தப்படும் சென்சார்கள், என்ஜினை ஸ்டார்ட் செய்யும் கருவிகள் மற்றும் டயர்களிலும் கூட இந்த அரிய வகை தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களிலும் காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய துகள்கள் என்ஜினில் இருந்து வெளிவருவதை கட்டுப்படுவதில் செரியம் (Cerium) போன்ற அரிய வகை தனிமம் பயன்படுகிறது. இத்தனை அரிய வகை தனிமங்களை வைத்துக் கொண்டு சீனா போக்கு காட்டி வருவதால், இந்த பிரச்சனையை சமாளிக்க வேறு வழிகள் எதாவது உள்ளதா என்பதையும், புதிய தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதுவரையில் இதற்கு ஒரு தீர்வு கிடைத்தது போல் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









