30 வருஷத்துக்கு முன்ன தமிழ்நாடு அரசு கொண்டுவந்த திட்டங்கள் பலன் கொடுக்குது! தூத்துக்குடியில் புதிய கார் ஆலை!
வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை திறந்துள்ளது. வியட்நாமில் மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட், வியட்நாம் நாட்டிற்கு வெளியே திறந்துள்ள முதல் தொழிற்சாலை இந்தியாவில் ஆகும். அதுவும், நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் (MK Stalin) அவர்களின் முன்னிலையில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் உருவாகியுள்ள இந்த தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு வெளியே தொழிற்சாலையை அமைக்க பெரும் தொகையை முதலீடு செய்ய தயாராகிய வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதனை வேறு எந்த நாட்டில் ஆவது திறந்திருக்கலாம்... ஆனால் இந்தியாவில் திறந்துள்ளதற்கு முக்கியமான காரணம் உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செலவு ஆனது மற்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் குறைவு. அதேநேரம், சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளும் குறை கூற முடியாத அளவிற்கு போதுமான அளவில் சரியான கலவையில் உள்ளதால் வின்ஃபாஸ்ட் மட்டுமில்லாமல் இன்னும் பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தியை துவங்க திட்டமிட்டு வருகின்றன.
பணியாளர்களும் குறைந்த ஊதியத்தில் அதிக எண்ணிக்கையில் கிடைப்பதால், இந்திய சந்தையில் பெரிதாக முன்னேற முடியாவிடினும், இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லலாம் என்பது பல நிறுவனங்களின் திட்டமிட்டமாக உள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தனது கார்களை மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதனால்தான் இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்ட பின் அதனை இந்தியாவின் தென்முனையில் நிறுவலாம் என்கிற முடிவுக்கு வின்ஃபாஸ்ட் வந்தது. ஏனெனில், தூத்துக்குடியில் திறக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை ஆனது உற்பத்தி தொழிற்சாலை கிடையாது; அசெம்பிள் (Assemble) தொழிற்சாலை ஆகும். அதாவது, வியட்நாமில் இருந்து பாகங்களை கொண்டுவந்து இங்கு முழு காராக உருவாக்கி விற்பனை செய்யலாம் என்பதுதான் தற்போதைக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் திட்டம் ஆகும்.
எதிர்காலத்தில் தேவையை பொறுத்து உற்பத்தி தொழிற்சாலையை நிறுவும் திட்டமும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் உள்ளது. வியட்நாமில் இருந்து கப்பல் வழியாக கார் பாகங்களை கொண்டுவரும்போது தூத்துக்குடி என்றால் பயண நேரம், செலவு என எல்லாமே குறையும் என்பதாலும், மேலும் தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை கொண்டு செல்வதும் எளிதாக இருக்கும் என்பதாலும் தொலைநோக்கு பார்வையுடன் இந்த விஷயத்தை வின்ஃபாஸ்ட் கையாண்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்துக்கு முன்பே இதே ஃபார்முலாவை பின்பற்றி ஹூண்டாய் (Hyundai), பி.எம்.டபிள்யூ (BMW), ரெனால்ட்-நிசான் (Renault-Nissan) நிறுவனங்கள் சென்னைக்கு அருகே தொழிற்சாலைகளை கொண்டுள்ளன. இருப்பினும், இந்த தொழிற்சாலைகள் மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு சென்றிருக்கலாமே, கடந்த 30 வருடங்களாகவே அதிகமாக ஏன் நமது தமிழ்நாட்டிற்கு வருகின்றன என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.
இதற்கு காரணம், கடந்த காலங்களில் இருந்து தமிழ்நாடு மாநில அரசு உருவாக்கிய உள்கட்டமைப்பு வசதிகளும், அறிவித்த மானியங்களும், வரி சலுகைகளும் ஆகும். திறமை வாய்ந்த தொழிலாளர்கள் அதிகம் கிடைப்பதுடன், தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதிகமாக உள்ளதால் சப்ளை செயினில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. இதனால்தான், தொழிற்சாலை நிறுவ தமிழ்நாட்டின் தூத்துக்குடி சரியான இடம் என வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அவர்களே தெரிவித்து உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டில் அதிக இடங்களில் சிப்காட் கிராமங்கள் அமைக்கப்பட்டது தான் வின்ஃபாஸ்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தைரியமாகவும், விரைவாகவும் இந்தியாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக நாங்கள் பார்க்கிறோம். இல்லையேல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் சமீப காலமாக தீவிரமாக இருக்கும் கர்நாடகா அல்லது ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு வின்ஃபாஸ்ட் சென்றிருக்கும்.


Click it and Unblock the Notifications









