எத்தன பேரின் தூக்கத்தை கெடுக்க போகுதோ!.. இந்த மாதிரி காரையெல்லாம் பொதுவெளியில காட்சிப்படுத்தாதீங்க..
ஒருவரின் கனவு வாகனமாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கின்றது சீன நிறுவனம் தயாரித்த கார் மாடல் ஒன்று. எக்ஸ்பெங் ஏரோ எச்டி (Xpeng Aero HT), இதுவே அந்த கார் மாடல் ஆகும். இது ஓர் ஆறு வீல்களைக் கொண்ட மாடுலர் பறக்கும் கார் (Modular Flying Car) ஆகும். அதாவது, இந்த வாகனத்தில் தனியாக ஓர் யூனிட் ட்ரோன் வடிவில் வழங்கப்பட்டு இருக்கும். அதுவே பறக்கும் திறனைக் கொண்டிருக்கும். சுமார் இரண்டு பேர் வரை அமர்ந்து அதில் பறக்க முடியும்.
இது பறப்பதற்கு ரன்-வே போன்ற எதுவும் தேவைப்படாது. ஓர் சீரான தரை இருந்தாலே போதும். அது வான் நோக்கி பறக்க தொடங்கிவிடும். அதாவது, டேக்-ஆஃப் ஆகிவிடும். ஆமாங்க, ஹெலிகாப்படரைப் போல செங்குத்தாக தரையிறங்குதல் மற்றும் டேக்-ஆஃப் ஆகும் வசதிக் கொண்ட ஓர் யூனிட்டையே காருடன் எக்ஸ்பெங் நிறுவனம் வழங்குகின்றது.

இத்தகைய வாகனத்தையே அமெரிக்காவின் லாஸ் வேகாஸ்-இல் உள்ள நெவடா-வில் நடைபெற்று வரும் சிஇஎஸ்-இல் எக்ஸ்பெங் காட்சிப்படுத்தி இருக்கின்றது. அப்போது இந்த வாகனம் பலரின் கவனத்தைக் கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இதன் பறக்கும் யூனிட்டே பலரின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. ஆகையால், இதை காண கூட்டம் அதிகளவில் அது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்டாலில் குவிந்தது.
இந்த யூனிட்டின் பறக்கும் திறனுக்காக ஆறு புரபெல்லர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே அந்த வாகனத்தை வான் நோக்கி வேகமாக பறக்க உதவுகின்றன. நின்ற இடத்தில் இருந்தே டேக்-ஆஃப் ஆகும் திறனைக் கொண்டிருப்பதால், வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள திறந்த வெளியே இந்த வாகன பயன்பாட்டிற்கு போதுமானதாக உள்ளது. முதலில் இந்த வாகனத்தை எக்ஸ்பெங் நிறுவனம் சீனாவிலேயே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதற்கு பின்னரே உலக சந்தையில் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது ஓர் மின்சார வாகனம் ஆகும். கார் மற்றும் பறக்கும் யூனிட் இரண்டுமே மின்சாரத்தில் இயங்கும். இதில், பறக்கும் யூனிட்டை காருக்குள் நிறுத்தினாலே போதும், அது சார்ஜாகிவிடும்.
இத்தகைய வடிவமைப்பை அது கொண்டிருக்கின்றது. மூன்று லட்சம் அமெரிக்க டாலர்களுக்கே இந்த வாகனம் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. அதாவது, இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையிலேயே இது விற்பனைச் செய்ப்பட இருக்கின்றது. இருப்பினும், இந்த கான்செப்ட் வாகன மாடலுக்கு ஆர்டர் குவிந்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இப்போதே, 3 ஆயிரம் வரை ப்ரீ-ஆர்டர்கள் கிடைத்துவிட்டதாக எக்ஸ்பெங் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இன்னும் அதிகமான ஆர்டர்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனத்தின் உற்பத்தி பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே தொடங்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
ஆகையால், சீக்கிரமே இதன் விற்பனை மற்றும் டெலிவரி பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏரோ எச்டி, எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அத்துடன், இந்த வாகனத்தைக் கொண்டு மினி கேம்ப் செட்-அப்பையே போட்டுக் கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கின்றது.
ஆகையால், ஃபேமிலியுடன் டிராவல் செய்ய, குறிப்பாக, சுற்றுலா செல்ல ஏதுவான வாகனமாக இது இருக்கும் என தெரிகின்றது. இதற்கேற்ப அம்சங்கள் அதில் அதிகளவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படவில்லை. விரைவிலேயே அவை குறித்த முழுமையான தகவல்களை எக்ஸ்பெங் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த வாகனம் விற்பனைக்கு வருவதற்கான எந்தவொரு சாத்தியக் கூறுகளும் தென்படவில்லை. அதேவேளையில், இந்த வாகனம் இப்போதே பலரின் கனவு வாகனமாக மாற தொடங்கிவிட்டது. ஆகையால், எக்ஸ்பெங் நிறுவனம் இந்த பறக்கும் வாகனத்தை விரைவில் உலக அளவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








