டாடா, மஹிந்திராவை விரட்டி விரட்டி வேட்டையாட போகும் கொரிய நிறுவனம்! அவமானத்தை துடைக்க விஸ்வரூபம் எடுக்குது!
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஹூண்டாய் நிறுவனத்தின் அந்த 2வது இடத்தை, இந்தியாவை சேர்ந்த டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய நிறுவனங்கள் பிடிக்க தொடங்கி விட்டன.
எனவே இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்வதற்காக வரும் 2030ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 26 புதிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக 4 கார்கள் வரும் 2027ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அந்த 4 கார்கள் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

காம்பேக்ட் எலெக்ட்ரிக் SUV (Compact Electric SUV): டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் வரும் பிப்ரவரி 4ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) நடைபெறவுள்ளது.
அனேகமாக இந்த வாகன திருவிழாவில் வைத்து, ஹூண்டாய் நிறுவனம் இந்த காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பெரிய பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), 400 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பன்ச் இவி-யில் பாஸ் (Baas) திட்டம் வழங்கப்படுகிறது. எனவே ஹூண்டாய்யின் இந்த காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரிலும் பாஸ் திட்டத்தை எதிர்பார்க்கலாம். பாஸ் திட்டம் வழங்கப்பட்டால், இதன் ஆரம்ப விலை வெறும் 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால் இதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு கிலோ மீட்டருக்கு தோராயமாக 2.50 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா (New-gen Hyundai Creta): இந்தியாவில் தற்போது விற்பனையில் இருப்பது ஹூண்டாய் க்ரெட்டா காரின் 2வது தலைமுறை மாடல் ஆகும். இதன் 3வது தலைமுறை மாடல் 2027ம் ஆண்டின் மத்திய பகுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் K3 பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய தலைமுறை க்ரெட்டா உருவாக்கப்படவுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், இதன் நீளம் சற்று பெரியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே உள்ளே தாராளமான இடவசதி கிடைக்கும். ஆண்ட்ராய்டு ஆட்டோமேட்டிக் ஆபரேட்டிங் சிஸ்டம் (Android Automotive Operating System - AAOS) அடிப்படையிலான 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதன் முக்கியமான அம்சமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது வழங்கப்படும் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) உடன், புதிய 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டாவின் வருகை, டாடா சியரா (Tata Sierra), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 (New-gen Hyundai i20): இந்தியாவில் தற்போது விற்பனையில் இருப்பது ஹூண்டாய் ஐ20 காரின் 3வது தலைமுறை மாடல் ஆகும். இதன் 4வது தலைமுறை மாடல் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில், லெவல் 2 அடாஸ் (Level 2 Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மற்றும் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் போன்றவை எல்லாம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் வருகை, டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஹூண்டாய் பேயான் (Hyundai Bayon): ஹூண்டாய் நிறுவனம் பேயான் காரை, நடப்பு 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை குறி வைத்து களமிறக்கப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஆகும்.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை ஹூண்டாய் பேயான் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆரம்பத்தில் இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டும் வழங்கப்பட்டாலும் கூட, எதிர்காலத்தில் இந்த காரிலும் ஹூண்டாய் நிறுவனம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு புதிய கார்களின் அறிமுகம் மூலம், இந்தியாவின் 2வது மிகப்பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை மீண்டும் பெற ஹூண்டாய் நிறுவனம் முயற்சி செய்கிறது. இதற்கு போட்டியாக டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களும் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்பதால், இந்திய சந்தையில் போட்டி அனல் பறக்க போவது உறுதி.


Click it and Unblock the Notifications