இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் வட மாநிலங்கள்! தமிழ்நாடுலாம் பக்கத்துல கூட போக முடியாது!
இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. வழக்கமான டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆகிறது. அத்துடன் டீசல் பஸ்களை போல், எலெக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது கிடையாது.
எனவே மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும், எலெக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில், டெல்லி (Delhi) இந்தியாவிற்கே முன்னோடியாக மாறியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா (Rekha Gupta) தலைமையிலான பாஜக (BJP) ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சமீபத்தில் 500 புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் டெல்லியில் இயக்கப்படும் மொத்த எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை தற்போது 4,286 ஆக உயர்ந்துள்ளது.
இது இந்திய அளவில் புதிய சாதனை ஆகும். அதாவது இந்தியாவிலேயே அதிக எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் பிராந்தியம் என்ற பெருமையை டெல்லி தற்போது சொந்தமாக்கியுள்ளது. முன்பு இந்த சாதனை மஹாராஷ்டிரா வசம் இருந்தது. மஹாராஷ்டிராவில் தற்போது ஒட்டுமொத்தமாக 4,001 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக 500 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், மஹாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி, டெல்லி முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் முறையே கர்நாடகா (1,989 எலெக்ட்ரிக் பஸ்கள்), குஜராத் (1,041 எலெக்ட்ரிக் பஸ்கள்), தெலங்கானா (875 எலெக்ட்ரிக் பஸ்கள்) மற்றும் உத்தர பிரதேசம் (874 எலெக்ட்ரிக் பஸ்கள்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதுகுறித்து ஹெச்டி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி முதல் அமைச்சர் ரேகா குப்தா கூறுகையில், ''டெல்லியில் பெண்கள் பஸ் டிரைவர்களாக பணியாற்றுகின்றனர். முதல் அமைச்சராக உள்ள நானும் பெண்தான். இந்தியாவில் பெண்கள் தலைமையில் முன்னேற்றம் சாத்தியமே. டெல்லி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மிகவும் நன்றி. டெல்லி மக்களுக்காக அமைச்சர்களும், அதிகாரிகளும் வருடத்தின் 365 நாளும் உழைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும், காற்று மாசுபாடு பிரச்சனையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவே அங்கு சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விஷயம்தான்.
இதன் மூலம் இந்தியாவின் தலைநகர் என்ற பெருமையுடன், இந்தியாவின் எலெக்ட்ரிக் பஸ்களின் தலைநகர் என்ற பெருமையையும் டெல்லி சேர்த்தே பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தி வருவதன் மூலம், டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனையை ஓரளவிற்கு குறைக்க முடியும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
இந்த நேரத்தில், டெல்லியை போல் தமிழ்நாட்டிலும் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை வெகுவாக உயர்த்த வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். தமிழ்நாட்டில் தற்போது சென்னையில் ஏராளமான எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாடு முழுக்க பரவலாக எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








