வருஷம் முழுக்க விற்பனை செய்தது மொத்தமே 4,510 கார்கள் தான்... இதுக்கே வாயை பொளக்கும் வெளிநாட்டு கார் கம்பெனி!!
சவால்கள் நிறைந்த சந்தை நிலைகளுக்கு மத்தியிலும், சில்லறை விற்பனை மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன வர்த்தகத்தில் வளர்ச்சியைக் கண்ட ஆடி இந்தியா (Audi India) நிறுவனம், 2025ஆம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டுக்கான உத்திகளுக்கும் ஏற்கனவே வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் ஆடி இந்தியா நிறுவனம் மொத்தம் 4 ஆயிரத்து 510 ஆடம்பர கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆடம்பர கார் சந்தையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை இந்த நிறுவனம் திறம்பட எதிர்கொண்டு இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தியாவில் கார் சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், பண்டிகைக் கால தேவை மற்றும் ஜிஎஸ்டி 2.0 போன்ற ஒழுங்குமுறை மாற்றங்கள் விற்பனைக்கு ஊக்கமளித்தன. இது ஆடம்பர கார் வாங்கும் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்தது.

இந்தியாவில் ஆடி வழங்கும் உயர்தர கார் மாடல்களான க்யூ7 (Q7), க்யூ8 (Q8), எஸ்5 ஸ்போர்ட்பேக் (S5 Sportback) மற்றும் ஆர்.எஸ் க்யூ8 பெர்ஃபார்மன்ஸ் (RS Q8 Performance) ஆகியவற்றிற்கான தேவை கடந்த வருடத்தில் மக்கள் மத்தியில் நிலையானதாக இருந்தது. அதேசமயம், அதிகம் விற்பனையாகும் ஆடி கார் மாடல்களான க்யூ3 (Q3), ஏ4 (A4), ஏ6 (A6) மற்றும் க்யூ5 (Q5) ஆகியவை எதிர்பார்த்ததை போல் ஆண்டு முழுவதும் சிறப்பான விற்பனையை பதிவு செய்தன.
ஆடி இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் பல்பீர் சிங் தில்லான், சந்தை சவால்களை ஒப்புக்கொண்டாலும், நிறுவனத்தின் அதற்கான தனி கவனத்தை சுட்டிக்காட்டினார். "சந்தை ஒரு சில சவால்களை முன்வைத்தாலும், எங்களின் செயல்படுதிறன் ஆனது எங்களது வாடிக்கையாளர் தளத்தின் விலைமதிப்பற்ற விசுவாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தும் நோக்கில் ஆடி நிறுவனம் கான்பூரில் ஒரு புதிய ஷோரூமையும், டேராடூனில் ஒரு புதிய சேவை மையத்தையும் 2025இல் திறந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் மன அமைதியையும் உறுதிசெய்கிறது. பயன்படுத்தப்பட்ட கார் (Used Car) பிரிவான 'ஆடி அப்ரூவ்டு: பிளஸ்' (Audi Approved: plus) 2025ஆம் ஆண்டில் விற்பனையில் 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த பிரிவின் நெட்வொர்க் ஆனது நாடு முழுவதும் 27 மையங்களாக விரிவடைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட ஆடி கார்கள் கிடைக்கின்றன. 2025ஆம் ஆண்டில், ஆடி இந்தியா நிறுவனம் புதியதாக ஆர்.எஸ் க்யூ8 பெர்ஃபார்மன்ஸ் காரை அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, ஏ4, க்யூ7, க்யூ3 மற்றும் க்யூ5 கார்களில் சிக்னேச்சர் எடிசன்களையும் வெளியிட்டது.
மேலும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) அவர்களை 'ஆடி இந்தியாவின் பிராண்ட் தூதர்' ஆக அறிவித்து, அவருடன் இணைந்தது. இவற்றுடன், ஆடம்பர கார் உரிமையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மாடல்களுக்கு 60 சதவீதம் வரை உத்தரவாதமான எதிர்கால மதிப்பை வழங்கும் 'பை பேக்' (Buy Back) திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை ஆடி அறிமுகப்படுத்தியது.
இது மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நெட்வொர்க்கை 6,500க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தியது. ஏனெனில், எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கும் நிறுவனங்களுள் ஆடியும் ஒன்றாகும். மேலும், நீண்ட கால வாரண்டி மற்றும் சாலை உதவி திட்டங்களையும் கடந்த ஆண்டில் ஆடி அறிமுகப்படுத்தியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலையான வளர்ச்சி, புதிய தயாரிப்புகள், பரந்த சில்லறை விற்பனை நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட முயற்சிகளுடன், இந்தியாவில் ஆடி நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான மேலும் முனைப்பான மற்றும் அற்புதமான திட்டங்களுடன் தயாராகி வருகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-benz) மற்றும் (BMW) நிறுவனங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஆடி விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








