5 லட்ச ரூபாய் இப்போதைக்கு இருந்தால் போதும், இந்த ஆடி காரை சொந்தமாக்கிடலாம்! ஷோரூமுக்கு போகனும்னு அவசியம் இல்ல!
ஆடி (Audi) நிறுவனம் வருகிற மார்ச் 17ஆம் தேதி புதிய எஸ்.க்யூ8 (SQ8) என்கிற பெர்ஃபார்மன்ஸ் (Performance) மிக்க காரை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எஸ்.க்யூ8 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆடி காரை எவ்வாறு புக் செய்வது என்பது உள்ளிட்ட இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனங்களுக்கு அடுத்ததாக ஆடி உள்ளது. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூவை போன்று ஜெர்மனி நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி அடுத்ததாக புதியதாக எஸ்.க்யூ8 என்கிற சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த காரின் விலை எங்களுக்கு தெரிந்தவரையில் கண்டிப்பாக ரூ.1.50 கோடிக்கு அதிகமாக தான் நிர்ணயிக்கப்படும். இத்தகைய விலையுயர்ந்த ஆடி எஸ்க்யூ8 காருக்கு தான் தற்போது இந்தியாவில் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மார்ச் 17இல் காரின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே விரும்புபவர்கள் ரூ.5 லட்சத்தை செலுத்தி இந்த காரை புக் செய்துக் கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் ஆடி டீலர்ஷிப் ஷோரூமுக்கு தான் செல்ல வேண்டும் என்றில்லை, ஆடியின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கம் அல்லது மைஆடி கனெக்ட் (myAudi Connect) மொபைல் செயலியில் காரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்தியாவில் ஏற்கனவே க்யூ8 மற்றும் ஆர்.எஸ் க்யூ8 (RS Q8) என்கிற இரு ஆடி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அவை இரண்டிற்கு மத்தியில் புதிய எஸ்.க்யூ8 சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதாவது, க்யூ8-க்கு மேலே ஆர்.எஸ் க்யூ8 காருக்கு கீழே. இதனால், க்யூ8 காரில் வழங்கப்படும் பெரும்பாலான அம்சங்கள் புதிய எஸ்க்யூ8 காரிலும் உள்ளன, குறிப்பாக கூபே ஸ்டைலிலான மேற்கூரையின் பின்பகுதி. இருப்பினும், க்யூ8 காரை விட செயல்திறன்மிக்கது.
இதற்காக, ஆடியின் எஸ் பிரிவில் இருந்து அப்கிரேட்கள் எஸ்க்யூ8 காருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 TFSI பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 500 எச்பி மற்றும் 770 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
இந்த என்ஜின், காரின் 4 சக்கரங்களுக்கும் ஆற்றலை அனுப்புகிறது. இதற்காக ஆடியின் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் (Quattro All-wheel-drive System) இந்த காரில் வழங்கப்படுகிறது. 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரால் செல்லக்கூடிய அதிகப்பட்ச வேகம் மிக அதிகம். ஆனால், மணிக்கு 250கிமீ வேகத்திற்கு மேல் செல்ல முடியாதப்படி வரையறைத்து வைத்துள்ளனர்.
சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளக்கூடிய ஏர் சஸ்பென்ஷன் மற்றும் ஆல்-வீல் ஸ்டீயரிங் சக்கரத்தால் இந்த காரை எளிதாக ஹேண்ட்லிங் செய்ய முடியும். தோற்றத்தை பொறுத்தவரையில், க்யூ8 காரை விட வித்தியாசமாக பெரிய ஏர் இண்டேக், பிரத்யேக எஸ் பேட்ஜ், மேட் சில்வர் நிற ஃபினிஷிங் மற்றும் குவாட் எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் பெரிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை புதிய எஸ்.க்யூ8 கார் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிவேகத்தில் இயங்கக்கூடிய ஆடி கார்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லை, உலகளவிலேயே நல்ல வரவேற்பு உள்ளது. முரட்டுத்தனமான லுக் மற்றும் அதிக செயல்படுதிறன் உடன் அளவில் பெரியதான சொகுசு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு புதிய ஆடி எஸ்.க்யூ8 கார் ஏற்றதாக இருக்கும். ரூ.1.5 கோடிக்கு மேல் விலை என்றாலும், இந்தியாவில் இந்த காரை வாங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர் என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications








