BS6 கார், பைக் உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்... PUC செல்லுபடி காலம் 3 ஆண்டுகளாக உயருமா?
கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் Pollution Under Control Certificate (PUC) எனப்படும் வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள மாசு உமிழ்வு அளவை காட்டும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்6 தரநிலையுடன் தயாரிக்கப்பட்ட தனியார் வாகனங்களுக்கான PUC சான்றிதழின் செல்லுபடி காலத்தை தற்போதைய ஒரு ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தும் வரைவு அறிவிப்பை (Draft Notification) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதனால், புதிதாக BS6 கார் அல்லது பைக் வாங்கிய கோடிக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு அடிக்கடி PUC சோதனை செய்ய வேண்டிய அவசியம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரைவு அறிவிப்பின்படி, 6 ஆண்டுகள் வரை பழமையான BS6 தனியார் வாகனங்களுக்கு PUC சான்றிதழின் செல்லுபடி காலம் 3 ஆண்டுகளாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது பிஎஸ்6 வாகனங்களுக்கு ஆண்டுதோறும் PUC சான்று புதுப்பிக்க வேண்டிய நடைமுறை உள்ளது.

பழமைய BS6 வாகனங்களுக்கு?
புதிய வரைவு அறிவிப்பில் உள்ளபடி, 6 முதல் 10 ஆண்டுகள் பழமையான BS6 வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை PUC புதுப்பிக்க வேண்டும். அதேபோன்று, 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான BS6 வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை PUC சோதனை கட்டாயமாக இருக்கும். புதிய விதி பிஎஸ்6 வாகனங்களுக்கு மட்டும் தளர்வு வழங்குகிறது. அதேநேரத்தில், பழைய வாகனங்களுக்கு கண்காணிப்பு மேலும் கடுமையாக்கப்படுகிறது.
மேலும், BS4 வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை PUC சான்று எடுக்க வேண்டும். BS1, BS2, BS3 வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை PUC சோதனை மேற்கொள்ள வேண்டும் என வரைவு விதியில் கூறப்பட்டுள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
பழைய தலைமுறை வாகனங்களைவிட பிஎஸ்6 வாகனங்கள் மிகவும் குறைந்த அளவு மாசு உமிழ்வு இருக்கும் வகையில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், ஒவ்வொரு ஆண்டும் PUC சோதனை நடத்த வேண்டிய அவசியம் குறைவாக இருப்பதாக அரசு கருதுகிறது. இதன் மூலம் வாகன உரிமையாளர்களின் நேரமும் செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடியாக அமலுக்கு வருமா?
இது தற்போது வரைவு அறிவிப்பு (Draft Notification) என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களிடம் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் கேட்கும் வகையில் கால அளவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவை பரிசீலிக்கப்பட்ட பிறகே இறுதி அறிவிப்பு வெளியாகும். அதுவரை தற்போதைய PUC சான்று விதிமுறைகளே நடைமுறையில் தொடரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
பிஎஸ்6 வாகனங்களுக்கு PUC செல்லுபடி காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், புதிய கார் மற்றும் பைக் உரிமையாளர்களுக்கு பெரிய நிம்மதியை தரும். அதேநேரத்தில், அதிக மாசுபாட்டை வெளியிடும் பழைய வாகனங்களுக்கு சோதனையை அடிக்கடி கட்டாயப்படுத்துவது காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உதவும். இருப்பினும், கருத்துக் கேட்புக்காக இன்னும் வரைவு விதிமுறைகளாக வெளியிடப்பட்டுள்ளதால் இறுதி அறிவிப்பு வெளியாகும் வரை தற்போதைய விதிமுறைகளையே வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications