பெட்ரோல் நிரப்பும் நேரத்திலேயே EV காருக்கு சார்ஜிங்... பிஒய்டியின் புரட்சிகர Flash Charging தொழில்நுட்பம்!
எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு பலர் தயங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சார்ஜிங் நேரம். பெட்ரோல் அல்லது டீசல் கார்களில் சில நிமிடங்களில் எரிபொருளை நிரப்பிவிட்டு பயணத்தைத் தொடர முடியும். ஆனால், எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலையை மாற்றும் வகையில் சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் புதிய FLASH CHARGING தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பெட்ரோல் நிரப்புவதற்கு ஆகும் நேரத்துக்கு நெருக்கமாகவே ஒரு எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Representative Image)
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இரண்டாம் தலைமுறை Blade Battery உடன் FLASH Charger இணைக்கப்பட்டால், பேட்டரியை 10 முதல் 70 சதவீதம் வரை வெறும் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்று பிஒய்டி கூறுகிறது. மேலும், 10 சதவீதத்திலிருந்து 97 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 9 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், நீண்ட தூர பயணங்களின்போது சார்ஜிங் ஸ்டேஷன்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் கணிசமாக குறையும்.
1.5 மெகாவாட் சார்ஜர்
இந்த அளவுக்கு அதிவேகமாக சார்ஜ் செய்ய பிரத்யேக தொழில்நுட்பத்துடன் பிளாஷ் சார்ஜரை பிஒய்டி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த சார்ஜர், ஒரு கனெக்டரில் அதிகபட்சமாக 1,500kW (1.5 மெகாவாட்) சார்ஜிங் பவரை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இவ்வளவு அதிக மின்சாரத்தை ஒரே நேரத்தில் கையாள்வதால், இதற்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதும் சாதாரண ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைப்பது போல இருக்காது.

பிரத்யேக கட்டமைப்பு தேவை
அதிக மின் தேவையை சமாளிக்கும் வகையில் பிரத்யேக மின் கட்டமைப்பு தேவைப்படும். அதேபோல், மின்சாரத்தை வேகமாக பேட்டரிக்குள் செலுத்தும்போது அதிக வெப்பம் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இந்த சவால்களை சமாளிக்க, பிஒய்டி நிறுவனத்தின் ப்ளாஷ் சார்ஜிங் கட்டமைப்பில சிறப்பு குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் Energy Storage System உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, மின்சாரத்தை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் அதிக சக்தியை சார்ஜருக்கு வழங்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் மூலம் மின் கட்டமைப்பில் ஏற்படும் திடீர் அதிகப்படியான சுமையை நிர்வகிக்க முடியும். இருப்பினும், இத்தகைய பிரத்யேக கட்டமைப்பு காரணமாக இந்த சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான செலவும் அதிகமாக இருக்கும்.
கடும் குளிரிலும் வேகமான சார்ஜிங்
பொதுவாக கடுமையான குளிர் காலநிலையில் பேட்டரியின் செயல்திறனும், சார்ஜ் செய்யும் வேகமும் பாதிக்கப்படலாம். இதையும் கருத்தில் கொண்டு, பல்வேறு சூழல்களிலும் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பிஒய்டி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அந்நிறுவனம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் கடுமையான குளிரான சூழலில் கூட பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 97 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 12 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான சூழலை ஒப்பிடும்போது, இதுபோன்ற கடுமையான குளிரிலும் சார்ஜிங் நேரம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று பிஒய்டி நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவுக்கு எப்போது வரும்?
முதற்கட்டமாக இந்த தொழில்நுட்பத்தை தனது தாய் நாடான சீனாவில் அறிமுகம் செய்ய பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவில் 20,000 பிளாஷ் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு உலகின் பல்வேறு சந்தைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த பிஒய்டி திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலும் பிஒய்டி நிறுவனம் ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் இந்தியாவுக்கும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனால், இந்தியாவில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய அதற்குரிய மின்சார கட்டமைப்பு, சார்ஜிங் நிலையங்களுக்கான முதலீடு மற்றும் தேவையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, இந்தியாவில் இந்த 1.5 மெகாவாட் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் எப்போது அறிமுகமாகும் என்பது தற்போது உறுதியாக கூற முடியாது.


Click it and Unblock the Notifications

