மைலேஜை அள்ளிக் கொடுக்கும் ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடும் நிறுவனம்
இதுவரை இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்த BYD முதல் முறையாக பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவி ஒன்றை வெளியிடவுள்ளது. இப்படி ஒரு காரினை வெளியிடவிருப்பதாக மே மாதம் கடைசி வாரம் அந்நிறுவனம் டீஸர் மூலமாக அறிவித்த நிலையில், தற்போது இந்தப் புதிய கார் எப்போது வெளியாகும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி, வரும் ஜூன் 9ம் தேதியன்று புதிய காரை வெளியிடவுள்ளது BYD. வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறதே தவிர, எந்த கார் மாடலை இந்தியாவில் வெளியிடவுள்ளது என்பது குறித்த தகவல் இப்போதும் மர்மமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் அட்டோ 2 (Atto 2) அல்லது சீலயன் 6 (Sealion 6) ஆகிய கார்களில் ஒன்றை இந்தியாவில் BYD வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ட்ராங் ஹைபிரிட் எஸ்யூவிக்களை பார்த்திருப்பீர்கள். ஹோண்டா சிட்டி ஹைபிரிட், மாருதி கிராண்டு விட்டாரா ஹைபிரிட் ஆகியவை எல்லாம் ஸ்ட்ராங் ஹைபிரிட் வகையறாவைச் சேர்ந்த கார்கள் தான். இந்த வகை கார்களில் சிறிய பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரி பேக்கை நாம் தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய தேவை இருக்காது. மேலும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியைக் கொண்டு மிகவும் குறைவான தூரம் மட்டுமே முழுமையாக எலெக்ட்ரிக் வாகனமாக அதனை இயக்க முடியும்.
பிளக்-இன் ஹைபிரிட் என்பவை அதற்கு அடுத்த கட்டத்தில் இருப்பவை. இதில் சற்று பெரிய பேட்டரி பேக் மற்றும் பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரி பேக்கை, எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வது போல நாம் தனியாக சார்ஜ் செய்ய வேண்டும். அதாவது இந்த பிளக்-இன் ஹைபிரிட் வகை கார்களுக்கு பெட்ரோலும் நிரப்ப வேண்டும், தனியாக சார்ஜும் செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் சில சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் இருந்து BYD வெளியிடவிருக்கும் இந்தப் புதிய பிளக்-இன் ஹைபிரிட் கார் முற்றிலும் வேறுபட்டது. சொகுசு நிறுவனங்கள் விற்பனை செய்த கார்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்ஜினும் காரின் இயக்கத்திற்குப் பயன்படும்.
ஆனால் BYD-யின் புதிய காரில் அப்படி இல்லை. இது முழுவதுமாக ஒரு எலெக்ட்ரிக் காராகவே இருக்கும். ஆனால் இதன் பேட்டரியை நாம் வெளியில் இருந்து பிளக் மூலம் சார்ஜ செய்வது மட்டுமில்லாமல், பெட்ரோல் இன்ஜினை ஒரு ஜெனரேட்டர் போலப் பயன்படுத்தியும் சார்ஜ் செய்ய முடியும். இந்த இன்ஜின் காரை நேரடியாக இயக்குவதற்குப் பயன்படாது. மாறாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த சார்ஜ் மூலம் காரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் செயல்பட்டு, அதன் மூலமே கார் இயங்கும்.
அந்த வகையில் இதனை பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவிக்கள் என்றும் சொல்லலாம், இல்லையென்றால் ரேஞ்சு எக்ஸ்டண்டர் எலெக்ட்ரிக் கார்கள் என்றும் சொல்லலாம். இந்தியாவில் மஹிந்திரா உள்ளிட்ட சில நிறுவனங்கள் இது போன்ற ஹைபிரிட் கார்களின் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அதற்கு முன்னதாகவே BYD நிறுவனம் இப்படியான ஒரு காரை இந்தியாவில் முதல் முறையாக வெளியிடவுள்ளது.
இந்த வகை காரில் பேட்டரிக்கு சார்ஜ் செய்ய வேண்டுமே என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, பெட்ரோலை வழக்கம் போல நிரப்பி பயணம் செய்து கொண்டே இருக்கலாம். மேலும் இதன் இன்ஜின் ஒரே வேகத்தில் சீராக இயங்கினால் போதும், காரின் பெர்ஃபாமன்ஸுக்கு ஏற்ப அதிகமாக இயங்கத் தேவையில்லை. இதனால் வழக்கமான பெட்ரோல் கார்களை விட அதிக மைலேஜ் பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: BYD-யின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது தான். இதனை அந்நிறுவனம் வெளியிடுவதன் மூலம் இந்தியாவில் இந்த வகையான கார்களுக்கு எவ்வளவு வாடிக்கையாளர் ஆதரவு இருக்கிறது என்பதை மற்ற நிறுவனங்களும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் புதிதாக ஒரு தொழில்நுட்பத்தை யாராவது முன்னெடுத்து கொண்டு வர வேண்டும். இந்த முறை அதனை BYD செய்யவிருக்கிறது. இது இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையை புதிய பாதையில் திருப்புவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications