5 மீட்டரில் பிரம்மாண்ட எஸ்யூவிக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்த சீனாவின் செரி நிறுவனம்!!
சீனாவைச் சேர்ந்த செரி ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான திட்டங்களில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஏற்கனவே ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் தனது புதிய கார் மாடல்களுடன் வர்த்தகத்தை துவங்க தயாராகி வருகிறது. மேலும், தொடர்ந்து தனது கார் மாடல்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்யும் முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வரிசையில், தற்போது 2 புதிய கார் மாடல்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்துள்ளது செரி ஆட்டோமொபைல் நிறுவனம். செரி நிறுவனத்தின் எக்ஸீடு இடி8 (Exeed ET8) மற்றும் ஒமோடா 04 (Omoda O4) ஆகிய இரண்டு புதிய கார் மாடல்களின் வடிவமைப்புகளுக்கும் இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட எஸ்யூவி
அண்மையில் இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு மாடல் 5 மீட்டர் நீளத்திற்கும் அதிகமான மிக பிரம்மாண்டமான சொகுசு எஸ்யூவி மாடலாக உள்ளது. எக்ஸீடு இடி8 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மாடல் மிகவும் பிரீமியம் தயாரிப்பாக இருக்கும். இந்த எஸ்யூவி 5,205 மிமீ நீளமும், 1,998 மிமீ அகலமும், 1,800 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இதன் வீல்பேஸ் 3,120 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தியாவில் உயர்வகை சொகுசு எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.
ET8-ன் வடிவமைப்பில் பெரிய அளவிலான premium SUV-களின் தாக்கம் தெரிகிறது. முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட்டுகள், தனித்துவமான முன்புற க்ரில் அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியில் 21 அங்குல அலாய் சக்கரங்களும், தனித்துவமான கதவு வடிவமைப்பும் இதன் பிரீமியம் தோற்றத்துடன் வசீகரிக்கிறது.

இந்த எஸ்யூவி 2+2+2 மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் இருக்கும். இரண்டாவது வரிசையில் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் 31 ஸ்பீக்கர்கள் கொண்ட போயா ஆடியோ சிஸ்டம் போன்ற பிரிமீயம் அம்சங்கள் இடம்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடல் ஹைப்ரிட் மாடலாக இருக்கும்பட்சத்தில், 1,400 கிமீ ரேஞ்ச் வழங்கும் என்பதும் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஏற்ற மாடல்?
அடுத்து இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்யப்பட்ட மாடலான ஒமோடா 04, மேலே பார்த்த எக்ஸீடு இடி8 மாடலை விட இது இந்திய சந்தைக்கு மிகவும் பொருத்தமான அளவில் உள்ளது. இந்த கார் 4,420 மிமீ நீளமும், 1,870 மிமீ அகலமும், 1,570 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,700 மிமீ ஆக உள்ளது. இந்த SUV C-Segment-ல் நிலைநிறுத்தப்படும். இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 190 மிமீ ஆக இருக்கிறது.

இந்த காரின் முக்கிய சிறப்பு பல்வேறு எரிபொருள் தேர்வுகளில் வழங்கும் வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச சந்தைகளில் இந்த மாடலானது பெட்ரோல், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் என அனைத்து வகையான எரிபொருள் வகையிலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும், ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும் மற்றும் எலெக்ட்ரிக் மாடலானது 66.05kWh பேட்டரி பேக்குடன் இரண்டு மின் மோட்டார்கள் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் இதே எரிபொருள் வகைகளில் கொண்டு வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் இல்லை.
ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி
இந்தியாவில் செரி ஆட்டோமொபைல் நிறுவனம் தொடர்ந்து காப்புரிமையை பதிவு செய்து வந்தாலும், ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் இந்த கார்களை கொண்டு வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து ஜேடூர் டி2 (Jetour T2) அடிப்படையிலான தனது முதல் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய செரி நிறுவனம் தயாராகி வருகிறது. இது ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலாக இருக்கும் என்பதுடன், ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் வரும் என்பதால் அதிக ஆவல் எழுந்துள்ளது.
இதனால் எக்ஸீடு இடி8 மற்றும் ஒமோடா 04 ஆகிய மாடல்களுக்கு காப்புரிமை பதிவு என்பது, எதிர்காலத்தில் ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் இந்த கார்கள் வருவதற்கான வாய்ப்பாகவே கருத முடியும். இந்த இரண்டு புதிய மாடல்கள் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் இல்லை.


Click it and Unblock the Notifications


