சீனாக்காரங்க கூட ஜோடி போட்ருக்காங்க! இந்தியாவின் அந்த முன்னணி நிறுவனம் இனி கார்களையும் விக்க போகுதா!
உலகில் அதிக கார்கள் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே இந்திய கார் சந்தையில் நுழைய உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களும் விதிவிலக்கு அல்ல. உதாரணத்திற்கு ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தை (JSW Group) எடுத்து கொள்ளலாம்.
மும்பையை (Mumbai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஸ்டீல், பெயிண்ட் மற்றும் சிமெண்ட் என்று பல்வேறு தொழில்களிலும் முன்னோடியாக உள்ளது. இந்த வரிசையில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்தியாவின் கார் சந்தையிலும் தற்போது நுழைந்துள்ளது. தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இயங்கி வருகிறது.

ஆனால் கூடிய விரைவில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனியாக தனது பிராண்டிலும் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக சீனாவை சேர்ந்த செர்ரி (Chery) நிறுவனத்துடன் தொழில்நுட்ப கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஏற்படுத்தி கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்திய சாலைகளில் தற்போது செர்ரி நிறுவனத்தின் ஏராளமான கார்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
செர்ரி ஐகார் வி23 (Chery iCar V23) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் செர்ரி ஜேக்கோ ஜே5 (Chery Jaecoo J5) காரும் சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுவதை நாம் பார்த்தோம். இந்திய சாலைகளில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது செர்ரி ஜேக்கோ ஜே5 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.

எனவே ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்தியாவில் செர்ரி ஜேக்கோ ஜே5 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என கருதப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் வேறு விதமாக உள்ளன. ஆம், செர்ரி ஜேக்கோ ஜே5 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டுமல்லாது, அதன் ஐசி இன்ஜின் வெர்ஷனையும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
செர்ரி ஜேக்கோ ஜே5 காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது முதல் முறையாக தொடங்கியுள்ளது. எனவேதான் செர்ரி ஜேக்கோ ஜே5 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனுடன் சேர்த்து, அதன் ஐசி இன்ஜின் வெர்ஷனையும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள செர்ரி ஜேக்கோ ஜே5 காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 156 பிஎஸ் பவர் மற்றும் 275 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
செர்ரி ஜேக்கோ ஜே5 காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் 2 இன்ஜின் ஆப்ஷன், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். அதாவது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 1.8 kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு இணைக்கப்பட்டு ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்ட்ரெயினாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 224 பிஎஸ் பவர் மற்றும் 295 என்எம் டார்க் ஆக உள்ளது. இதே இன்ஜின் ஆப்ஷன்களை இந்திய சந்தையிலும் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் லெவல் 2 அடாஸ், 13.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும் (Features) வழங்கப்படும் என தெரிகிறது.
மேலும் 540 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம், ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் 7 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்திய சாலைகளில் தற்போது ஏராளமான கார்களை சோதனை செய்து வருகிறது. சோதனை செய்யப்படுகிறது என்பதற்காக அந்த அத்தனை கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என நாம் கருத முடியாது. சோதனை செய்யப்படும் கார்களில் ஒரு சில மாடல்களை மட்டும் தேர்வு செய்து ஜேஎஸ்டபிள்யூ குழுமம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம்.
அல்லது அத்தனை கார்களையும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு கொண்டு வரலாம். எனவே எந்தெந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வர போகிறது? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் எது எப்படியோ ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் முதல் கார் அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே விற்பனைக்கு களமிறக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பில் இருந்த எழுத்து பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications