இந்த ஜூனில் புதுசா கார் வாங்கும் பிளான் இருக்கா? சிட்ரோயன் கார்களில் ரூ.1.40 லட்சம் வரை ஆஃபர்!
பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோயன் உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. எந்த அளவிற்கு பழமையானது என்றால், சிட்ரோயன் நிறுவனம் நிறுவப்பட்டு 107 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 1919ஆம் ஆண்டின் ஜூன் 4ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிட்ரோயன், கடந்த ஜூன் 4ஆம் தேதியோடு 107 வருடங்களை நிறைவு செய்து 108ஆம் ஆண்டிற்குள் நுழைந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக பல நாடுகளில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ள சிட்ரோயன், இந்தியாவிலும் இந்த ஜூன் மாதம் முழுக்க கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் சில சிறப்பு சலுகைகள் & தள்ளுபடிகள் சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் 2021ஆம் ஆண்டில் நுழைந்தது. 2021இல் பிரபலமான ஸ்டெல்லாண்டிஸ் குழுமம் சிட்ரோயன் நிறுவனத்தை சொந்தமாக்கிய பிறகு அதனை இந்திய சந்தையில் நுழைத்தது. இந்த நிலையில், 108ஆம் வருடத்தில் நுழைவதை கொண்டாடும் விதமாக இந்தியாவில் உள்ள சிட்ரோயன் டீலர்ஷிப் ஷோரூம்கள் அனைத்திலும் ஜூன் 30ஆம் தேதி வரையில் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, இந்த ஜூன் மாதத்தில் சிட்ரோயன் கார்களை அதிகப்பட்சமாக ரூ.1.4 லட்சம் வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம். இந்த சலுகைகள் சிட்ரோயன் கார்களை சர்வீஸ் செய்வதிலும், ஆக்ஸசரீகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்பு சேவைகளில் ஜூன் 30 வரையில் பணம் தள்ளுபடிகளை பெறலாம். இந்த பணம் தள்ளுபடி ஆனது சிட்ரோயன் டீலர்ஷிப் ஷோரூம்கள் வாயிலாக வழங்கப்படுவதால், ஷோரூமை பொறுத்து பணம் தள்ளுபடி மாறக்கூடும்.

இதனுடன், கார்களுக்கான ஆக்ஸசரீகள் மற்றும் கூடுதலாக சேர்க்கப்படும் சேவைகளில் 10.8% தள்ளுபடியை பெறலாம் என சிட்ரோயன் அறிவித்துள்ளது. சரியாக ஜூன் 4ஆம் தேதி தங்களது சிட்ரோயன் கார்களை சர்வீஸ் செய்த வாடிக்கையாளர்களுக்கு பணியாளர்கள் கட்டணத்திலும் ஆச்சிரிய பரிசாக குறிப்பிட்ட தொகை குறைத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன், மற்றவர்களுக்கு பரிந்துரை செய்து சிட்ரோயன் காரை வாங்க வைக்கும் கஸ்டமர்களுக்கு சிறப்பு பரிசுகளும் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படுகின்றன.
108ஆம் வருடத்தில் நுழைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டெல்லாண்டிஸ் இந்தியா குழுமத்தின் ஆட்டோமோட்டிவ் பிராண்ட்களுக்கான இயக்குனர் குமார் பிரியேஷ், "உலகளவில் சிட்ரோயன் தனது 108வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், அனைவருக்கும் ஏற்ற புதுமை, சௌகரியமான பயண அனுபவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தி, இந்த மரபை இந்தியாவில் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்".
"எங்களின் ஸ்மார்ட் கார் பிளாட்ஃபார்ம், இந்தியத் தேவைகளுக்கு ஏற்ற உலகத்தரம் வாய்ந்த பொறியியல் தீர்வுகளை வழங்குவதோடு, உள்நாட்டு உற்பத்தியையும், போட்டித்தன்மையையும் ஊக்குவிப்பதில் எங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுகிறது" என தெரிவித்துள்ளார். சிட்ரோயன் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஐந்து கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவையாவன, சி3எக்ஸ், இ-சி3, சி3 ஏர்கிராஸ் எக்ஸ், பசால்ட் எக்ஸ் மற்றும் சி5 ஏர்கிராஸ் என்பன ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 108 வருடங்களாக செயல்பட்டு வருவதன் மூலம் சிட்ரோயன் நிறுவனத்தின் வரலாறு எந்த அளவிற்கு நீண்டதாக உள்ளது என்பதை அறியலாம். உலகின் பல நாடுகளில் எளிதில் அணுகக் கூடியவைகளாக விளங்கும் சிட்ரோயன் கார்கள் அன்றாட நடைமுறை பயன்பாட்டிற்கும், சவுகரியத்திற்கும் ஏற்றவைகளாக உள்ளன. எல்லாவற்றையும் விட முக்கியமாக, பல நாடுகளில் சிட்ரோயன் கார்கள் அனைத்து விதமான மக்களும் வாங்கக்கூடிய வகையில், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவிலும் கூட, சி5 ஏர்கிராஸ் காரை தவிர்த்து மற்ற நான்கு சிட்ரோயன் கார்களும் விலை குறைவானகளாக விளங்குகின்றன. இந்த நிறுவனத்தை நிறுவிய ஆண்ட்ரே சிட்ரோயன் அவர்களின் தொலைநோக்கு பார்வையை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடியதாக தற்போதைய சிட்ரோயன் நிறுவனம் செயல்படுகிறது. 108ஆம் வருட கொண்டாட்டங்களின் மூலம் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த சிட்ரோயன் விரும்புகிறது.


Click it and Unblock the Notifications