மக்கள் தலையில இடியை இறக்கிட்டாங்க.. பெட்ரோலைப் போல CNG-யின் விலையும் உயர்ந்தது
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு. இதற்கே மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் CNG எரிபொருளின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் போது கூட அதிக மைலேஜ் கொடுக்கும் CNG இருக்கிறது என மக்கள் ஆசுவாசப்படும் நிலையில், தற்போது அதன் விலையும் உயர்த்தப்ட்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது பெட்ரோலுக்கு அடுத்தபடியாக CNG எரிபொருளில் இயங்கும் கார்களைத் தான் மக்கள் அதிகம் வாங்கி வருகிறார்கள். இதனாலேயே கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த விலை உயர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட நிலையில், CNG எரிபொருளின் விலை தற்போது 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து சென்னையில் ஒரு கிலோ CNG-யானது 91.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. CNG எரிபொருளானது கிலோக்களிலேயே அளவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் நிலவும் பிரச்சினைகளின் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதனாலேயே எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் எரிபொருளின் விலை உயரும் போது அதனை சார்ந்திருக்கும் அனைத்து விதமான பொருட்களின் விலையும் மென்மேலும் உயரும், இது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள் கார் வாங்கலாமா வேண்டாமா என்று ஊசலாட்டத்திலேயே இருப்பர். இந்த விலை உயர்வுகள் அவர்களின் கார் வாங்கும் கனவைத் தள்ளி வைக்கும் அல்லது வாங்க வேண்டாம் என்ற முடிவை எடுக்க வைத்து விடும். இது சிறிய ரக அல்லது பட்ஜெட் கார்களின் விற்பனையிலும் எதிரொலிக்கும்.
அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாலேயே நிறைய வாடிக்கையாளர்கள் இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைத் தவிர்த்து CNG வாகனங்களை வாங்க முன்வருகின்றனர். தற்போது அதன் விலையும் பெட்ரோல் அல்லது டீசலின் அளவிற்கு உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விலை உயர்வு இத்துடன் நின்று விடுமா அல்லது இன்னும் தொடருமா என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.
தற்போது CNG எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டிருப்பதனால் CNG கார் வாடிக்கையாளர்களின் தினசரி பயன்பாட்டுச் செலவு உயரவுள்ளது. இதில் ஒரே ஒரு ஆசுவாசமான விஷயம் பெட்ரோலை விட CNG எரிபொருள் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பது தான். மாருதியின் CNG கார்களே தற்போது அதிக மைலேஜ் கொடுப்பவையாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மாருதியின் செலரியோ CNG மாடல் தான் அதிக மைலேஜ் கொடுக்கும் ஒரு காராக இருந்து வருகிறது. இந்தக் காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினானது CNG எரிபொருளில் இயங்கும் போது அதிக மைலேஜ் கொடுக்கிறது. அதிகபட்சமாக கிலோவுக்கு 35 கிமீ வரையிலான மைலேஜ் கொடுப்பதாக ARAI அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. இதேபோல் மாருதியின் பிற CNG கார்களும் கிலோவுக்கு 30 கிமீ முதல் 35 கிமீ வரையிலான ARAI மைலேஜையே கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட போதே CNG எரிபொருளின் விலையும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் விரைவாக சில நாட்கள் இடைவெளியிலேயே வந்து விட்டது. விலை உயர்ந்திருந்தாலும், இப்போதும் பெட்ரோல் அல்லது டீசலை விட இப்போதும் CNG காரைப் பயன்படுத்துவது பலனளிக்கும் ஒன்றாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலும் பெட்ரோல் டீசலுடன் CNG விலை உயர்வையும் சம அளவில் நாம் எதிர்பார்த்து தயாராக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications