சும்மா பார்க்கிங் பண்ணீருந்தா கூட தூக்கீருவாங்க! அரசின் திடீர் உத்தரவால் வாகன உரிமையாளர்கள் நடுக்கம்!
இந்தியாவின் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் (Traffic Congestion) பிரச்சனையுடன் சேர்த்து, காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இவை இரண்டிற்குமே வாகனங்களின் பெருக்கம்தான் மிகவும் முக்கியமான காரணம். போக்குவரத்து நெரிசல் பிரச்சனை ஒரு பக்கம் மன உளைச்சலை ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில், காற்று மாசுபாடு பிரச்சனை பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு காரணமாகி வருகிறது.
எனவே இந்த 2 பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டுள்ளன. குறிப்பாக காற்று மாசுபாடு பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அத்துடன் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக டெல்லியை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi NCR), இந்த நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே காற்று மாசுபாடு பிரச்சனை மிகவும் தீவிரமாக உள்ள பகுதியாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் அறியப்படுகிறது. எனவே அங்கு பழைய வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களை டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் இந்த வாகனங்களை டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு டெல்லி போக்குவரத்து துறை தற்போது கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களை டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயக்க கூடாது. அதை மீறி இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, 'ஸ்கிராப்' செய்யப்படும். அதாவது அழிக்கப்படும். தடை விதிக்கப்பட்ட வாகனங்கள், டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய சாலைகளில் 'பார்க்கிங்' செய்யப்பட்டிருந்தாலும் கூட, அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்.
இந்த பணியில் ஆட்டோமேட்டிக் கேமராக்களும் பயன்படுத்தப்படவுள்ளன. அவை வாகனங்களின் நம்பர் பிளேட்களை ஆராயும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகனம் டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் இயக்குவதற்கு தடை செய்யப்பட்டதா? என்பது கண்டறியப்படும். ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களை, டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் இயக்குவதற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மற்ற பகுதிகளில் அந்த வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு தேவையான தடையில்லா சான்றிதழை பெற்று விட்டு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய பகுதிக்கு வெளியே அவற்றை பயன்படுத்தி கொள்ளும்படி, டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களின் உரிமையாளர்கள் பலரும், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளர்கள் பலரும், தங்கள் வாகனங்களை நல்ல கண்டிஷனில் பராமரித்து வருகின்றனர். எனவே வாகனங்களின் வயது கணக்கீட்டின் அடிப்படையில் பொதுவாக தடை விதிக்கப்பட்டால், அவர்களும் சேர்த்தே பாதிக்கப்படுவார்கள்.
எனவே ஒரு வாகனம் எவ்வளவு மாசுபாட்டை ஏற்படுத்துகிறது? என்பதன் அடிப்படையில் மட்டும் தடை விதிக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும். இல்லாவிட்டால் அனைத்து வாகனங்களும் பாதிக்கப்படும் என்பதை அரசு கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








