கார்களின் விலை கன்னாபின்னானு உயர போகுது! எல்லாத்துக்கும் இந்த ட்ரம்ப்தான் காரணம்!
அமெரிக்க அதிபராக (US President) பதவியேற்றது முதலே டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு உலக நாடுகளின் பொருட்களுக்கு வரிகளை (Tariffs) மிக கடுமையாக உயர்த்தினார். பின்னர் வரிகளை குறைக்கவும் செய்தார்.
உண்மையில் வரி விவகாரத்தில், தெளிவற்ற ஒரு குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் (European Union - EU) போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளும் தப்பவில்லை. இந்த சூழலில், ஐரோப்பிய யூனியன் ஒரு இக்கட்டான சூழலை தற்போது எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் வர்த்தக ஒப்பந்தம் (Trade Deal) ஒன்று கையெழுத்தானது. இதன் காரணமாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. பதிலுக்கு அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு வரிகளை நீக்க ஐரோப்பிய யூனியன் ஒப்பு கொண்டது.
ஆனால் இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியன் இணங்கவில்லை என டொனால்டு ட்ரம்ப் தற்போது அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் லாரிகளுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்த போவதாகவும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியன் இணங்கவில்லை என்பதால்தான் வரிகளை உயர்த்த போவதாக டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''எங்களுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியன் முழுமையாக இணங்கவில்லை. எனவே அடுத்த வாரம் வரிகளை உயர்த்த போகிறேன்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் கார்கள் மற்றும் லாரிகளுக்கான வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும். ஆனால் அவர்கள் அமெரிக்காவில் கார்கள் மற்றும் லாரிகளை உற்பத்தி செய்தால், வரிகள் எதுவும் கிடையாது என்பதையும் நான் இங்கே மிகவும் தெளிவாக குறிப்பிட்டு கொள்கிறேன்'' என்றார். இது குறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஐரோப்பிய யூனியனில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் லாரிகளின் விலை மிக கடுமையாக உயரும். அவற்றின் விலை அமெரிக்க சந்தையில் சுமார் 10 சதவீதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனை சேர்ந்த கார் மற்றும் லாரி நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதைதான் எதிர்பார்க்கிறார். வெளிநாடுகளின் தொழிற்சாலைகள் அமெரிக்காவிற்கு மாற்றப்படும்பட்சத்தில், அமெரிக்கர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.
மறுபக்கம் வரி கிடையாது என்பதால், கார்கள் மற்றும் லாரிகளின் விலையும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக அவற்றின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் தொழிற்சாலைகளை இடம் மாற்றுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பெரிய அளவிலான முதலீடுகள் தேவைப்படும். எனவே டொனால்டு ட்ரம்ப்பின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications