இ20 பெட்ரோலால் பிஎஸ்3 வாகனங்களில் இந்த பாகங்களை மாற்ற வேண்டி வரும்... அடுத்த உண்மையை சொன்ன கட்காரி!!
கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 வாகனங்கள் குறித்த ஒரு முக்கிய உண்மையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களை வைத்திருப்போர் என்ன செய்ய வேண்டும்; வாகனங்களில் ஏற்படும் பிரச்னை குறித்த தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து விரிவாகப் பார்க்கலாம்.
இ20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகன எஞ்சின்களில் பிரச்னை ஏற்படுமா? என்பது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,"இ20 பெட்ரோல் பயன்படுத்துவது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC), டேராடூனில் செயல்படும் இந்திய பெட்ரோலிய தொழில்நுட்பக் கழகம் (IIP), இந்திய வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (ARAI) மற்றும் இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (SIAM) ஆகியவை மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் மூலம் கார் மற்றும் இருசக்கர வாகன எஞ்சின்களில் மாறுதல்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது கண்டறியப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுகளின் மூலமாக இ20 பெட்ரோல் பயன்படுத்தும்போது பழைய வாகனங்களில் கூட செயல்திறன் மற்றும் உதிரிபாகங்களில் அசாதாரணமான பிரச்னைகள் அல்லது தேய்மானங்கள் ஏதும் ஏற்படவில்லை.
ஆனால், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2016ம் ஆண்டு வரை பிஎஸ்3 மாசு உமிழ்வு தர நிலையுடன் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் எஞ்சின்களில் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்றும் சூழல் ஏற்படலாம். இது வழக்கமான பரிசோதனைகளின்போது ஆய்வு செய்து எளிதாக மாற்றிக் கொள்ளலாம். எஞ்சினில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவையில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இ20 பயன்படுத்துவதால் மைலேஜ் குறைகிறது என்று எழுந்துள்ள புகார்கள் குறித்து அமைச்சர் நிதின் கட்காரி அளித்துள்ள பதிலில், "சோதனை மேற்கொண்ட அமைப்புகளின் அளித்துள்ள விளக்கங்களின்படி, மைலேஜ் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. இ20 பெட்ரோல் பயன்படுத்துவது மட்டுமே காரணமாக இருக்காது,"என்று தெரிவித்துள்ளார்.
இ20 பெட்ரோல் பயன்படுத்துவதன் காரணமாக மைலேஜ் குறைவதாகவும், எஞ்சினில் பழுது ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வாகன உரிமையாளர்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பி வருகின்றனர். பராமரிப்பு செலவும் அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இ20 பெட்ரோலால் பிரச்னை இருக்காது என்றும், இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்களும், புகார்களும் வரவில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.
எனினும், பிஎஸ்6 ஃபேஸ்2 தர நிலைக்கு இணக்கமாக தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இந்த பிரச்னை வராது என்றும், அதற்கு முந்தைய காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் குறையும் என்றும் மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும், இ20 பெட்ரோல் பயன்பாடு அதிக அளவில் இருப்பதால், வாகன உரிமையாளர்கள் சரியான இடைவெளிகளில் வாகனங்களை பராமரிப்பு செய்வது அவசியமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications