ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் குறைவான விலையில் பெட்ரோல்! இந்த ஊர் மக்கள் குடுத்து வெச்சவங்க!
பெட்ரோல், டீசலின் (Petrol, Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக எத்தனாலை (Ethanol) எரிபொருளாக பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய முழுவதும் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்தான் விற்பனை செய்யப்படுகிறது.
இது E20 எரிபொருள் என அழைக்கப்படுகிறது. அதாவது இந்த எரிபொருளில் 20 சதவீதம் எத்தனாலும், 80 சதவீதம் பெட்ரோலும் இருக்கும். இந்த வரிசையில் E85 எரிபொருளும் இந்தியாவில் தற்போது படிப்படியாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பையில் தற்போது E85 எரிபொருளின் விற்பனை தொடங்கியுள்ளது.

இது 85 சதவீதம் எத்தனாலும், 15 சதவீதம் பெட்ரோலும் கலந்த எரிபொருள் ஆகும். மும்பையில் தற்போது ஒரு லிட்டர் E85 எரிபொருளின் விலை 91.18 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு லிட்டர் E20 எரிபொருளின் விலை அங்கு 111.33 ரூபாயாக இருக்கிறது. அதாவது E20 எரிபொருள் உடன் ஒப்பிடும்போது E85 எரிபொருளின் விலை 20.15 ரூபாய் குறைவு ஆகும்.
எனவே E20 எரிபொருளில் இருந்து E85 எரிபொருளுக்கு மாறினால், ஒரு லிட்டருக்கு மட்டும் நீங்கள் 20.15 ரூபாயை சேமிக்க முடியும். இது குறித்து டீம்-பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே E85 எரிபொருளில் இயங்க கூடிய தன்மை வாய்ந்தவையாக உள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்குகளின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வெர்ஷன்களை (Flex-Fuel Versions) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவை E85 எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டவை.
அதேபோல் மாருதி சுஸுகி நிறுவனமும் தனது வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வெர்ஷனை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது E85 மட்டுமல்லாது, E100 எரிபொருளிலும் இயங்கும். அதாவது 100 சதவீதம் எத்தனாலில் இயங்க கூடிய திறனையும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் கொண்டுள்ளது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வெர்ஷனில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் K12N இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து வரும் காலங்களில் இந்தியாவில் இன்னும் ஏராளமான ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இதில், ஹோண்டா (Honda) நிறுவனத்தின் டூவீலரும் அடங்கும்.
ஹோண்டா நிறுவனம் புத்தம் புதிய ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் டூவீலர் ஒன்றை வரும் ஜூலை 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இது ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக்கின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வெர்ஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் போன்ற விவசாய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை உள்நாட்டிலேயே தயாரிப்பதால் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும். அதிக அளவில் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும்.
அதிக அளவில் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் விற்பனை அதிகரித்தால் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறையும். இது இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். அத்துடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவது அதிகரித்தால், அது இந்திய விவசாயிகளுக்கும் நன்மையை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications