புது கார்களின் விலை ரூ.2.50 லட்சம் குறைய போகுது... ஜிஎஸ்டி வரி குறைப்பை தொடர்ந்து அரசு அடுத்த அதிரடி...
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் விரும்புகின்றன. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை (Air Pollution) குறைக்க வேண்டும் என்பதுதான் இதற்கான முக்கிய காரணம்.
அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியையும் இதன் மூலமாக குறைக்க முடியும். இது ஒரு வகையில் இந்தியாவின் அந்திய செலாவணி (Forex) கையிருப்பை உயர்த்தி, பொருளாதார ரீதியில் நாட்டிற்கு நன்மைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா ஏன் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டுள்ளது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வந்தாலும் கூட, நாட்டின் தலைநகரான டெல்லிதான் (Delhi), எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராகவும் மாறி வருகிறது.
டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக தற்போது ஒரு சில திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி 30 லட்ச ரூபாய் வரை விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணங்கள் (Registration Fee) செலுத்துவதில் இருந்து 100 சதவீதம் விலக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது 30 லட்ச ரூபாய் வரை விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்கள், சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் முதல் 2.50 லட்ச ரூபாய் வரை ஆன்-ரோடு விலை (On-road Price) குறையலாம்.
அதேபோல் 30 லட்ச ரூபாய் வரை விலை கொண்ட ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை வாங்குபவர்களுக்கும், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் 50 சதவீத விலக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களின் விலையும் குறையும். இதன் காரணமாக எலெக்ட்ரிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டில் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பால், புதிய கார்களின் விலை வெகுவாக குறைந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், இந்தியா முழுக்க புதிய கார்களின் விலை குறைந்தது. தற்போது டெல்லி அரசின் அதிரடி நடவடிக்கையால், மீண்டும் ஒரு முறை கார்களின் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் டெல்லியில் பதிவு செய்யப்படும் கார்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வரும் 2030ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த சலுகையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் புதிய வாகனங்களை வாங்க ஷோரூம்களுக்கு வரும் பொதுமக்களை, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என டீலர்ஷிப்களுக்கு, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா (Rekha Gupta) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் வலியுறுத்தல் எந்த அளவிற்கு வேலை செய்யும்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் டீலர்ஷிப்களால் மட்டும் வாடிக்கையாளர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.
இன்னும் சொல்லப்போனால் டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு (Charging Stations) மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்தால்தான், மக்கள் நம்பிக்கையுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள். எனவே டெல்லி அரசு தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் சேர்த்து, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








