எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மகாராஷ்டிராவிற்கு முதலிடம்.. தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. மானியங்களுக்காக இன்றி வாடிக்கையாளர்கள் தாங்களாகவே விரும்பி எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். 2026ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான ஓராண்டு) இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை குறித்த தரவுகள் மாநிலம் வாரியாக தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டில் மகராஷ்டிரா மாநிலத்திலேயே அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. அந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 34,139 எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு, அதாவது 100% விற்பனை உயர்வாகும். இந்த விற்பனை அளவுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது மகாராஷ்டிரா. அம்மாநிலத்தில் மும்பை மற்றும் புனே ஆகிய பெருநகரங்கள் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகளவில் ஊக்குவிக்கும் வகையில் இருக்கின்றன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் கடந்த ஓராண்டில் முறையே 24,316 மற்றும் 20,363 எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள் விற்பனையாகியுள்ளன. 2025ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த மாநிலங்களில் கடந்த 2026ம் நிதியாண்டின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அளவு முறையே 64% மற்றும் 66% வரை உயர்ந்திருக்கிறது.
நான்காவது இடத்திலேயே தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் மட்டும் 17,224 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இது 102% விற்பனை உயர்வாகும். சென்னையே தமிழகத்தில் பெருவாரியான எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மற்ற நகரங்கள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவைப் போலவே இந்தியாவின் நிறைய மாநிலங்களில் கடந்த ஓராண்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மற்றும் பயன்பாடு இருமடங்கு வரை உயர்ந்திருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த மாநிலங்களில் கடந்த ஓராண்டில் முறையே 14,531, 6,098 மற்றும் 5,307 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்காகும்.
எலெக்ட்ரிக் வாகன விற்பனை வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலமே முதலிடத்தில் இருக்கிறது. இங்கே கடந்த ஓராண்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 163% வளர்ச்சியடைந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் 142%-மும், ராஜஸ்தானில் 132%-மும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டெல்லி ஐந்தாம் இடத்திலும், ராஜஸ்தான் எட்டாம் இடத்திலும், பஞ்சாப் 13ம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது எலெக்ட்ரிக் வாகன விற்பனை 83.63% வளர்ச்சியடைந்துள்ளது. 2025ம் நிதியாண்டில் 1.08 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனையாகியிருந்த நிலையில்ஸ 2026ம் நிதியாண்டில் இந்த அளவு 2 லட்சமாக (77 யூனிட்டுகள் குறைவாக) உயர்ந்திருக்கிறது. இந்த விற்பனை வளர்ச்சியானது எலெக்ட்ரிக் கார்கள் மேல் இந்திய வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டில் சென்னையே எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அதிகளவில் பங்களித்து வருகின்றன. எனினும் கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மற்ற சில மாவட்டங்களிலும் முன்பை விட கணிசமான அளவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் கட்டமைப்பே பெருநகரங்கள் அல்லாத இடங்களில் எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கான முக்கிய தடையாக உள்ளது. குறைவான தூரப் பயன்பாட்டையே முதன்மையாகக் கொண்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள் கூட சிறுநகரங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் கார்களுக்கு மனத்தடை தொடர்ந்து நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications








