இவி-களில் இது ஒரு பிரச்சனையா மாறும்னு எதிர்பார்க்கல... எலெக்ட்ரிக் கார் வாங்கும்போது கவனமா இருங்க!!
இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் முதல், அனைத்து எலெக்ட்ரிக் (Electric) நான்கு சக்கர வாகனங்களும் குறைந்த வேகத்தில் செல்லும்போது செயற்கையாக ஒலியை எழுப்ப வேண்டும் என்று இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) அறிவித்துள்ளது. இது பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.
ARAI இயக்குநர் ரெஜி மத்தாய் கூறுகையில், மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 'அகோஸ்டிக் வெஹிக்கிள் அலெர்டிங் சிஸ்டம்' (ஒலியியல் வாகன எச்சரிக்கை அமைப்பு) கட்டாயமாக்கப்படும். வழக்கமான வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் அமைதியானவை என்பதால், சாலையில் செல்லும் பாதசாரிகள் தொடர்பான விபத்து அபாயத்தைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும் என்று அவர் விளக்கினார்.

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் இதேபோன்ற ஒலி அமைப்பை அறிமுகப்படுத்துவது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஒலி தெளிவாகக் கேட்கும் வகையில் இருக்க வேண்டும். அதேசமயம் இடையூறாக இருக்க கூடாது என்பதில் கவனம் செலுத்தப்படுவதாக ARAI சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
ரெஜி மத்தாய் புனேவில் நடைபெற்ற ஓர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். ஜனவரி 27 முதல் 30 வரை புனே சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 19வது சர்வதேச வாகன தொழில்நுட்ப மாநாடு (Symposium on International Automotive Technology) குறித்த அறிவிப்புக்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கான மாசு உமிழ்வு தரநிலைகளை நிர்ணயிக்கும் குழுவில் ARAI ஒரு பகுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், 2027ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள 'பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்' (Bharat New Car Assessment Programme)-இன் அடுத்த கட்டத்திற்கும் தங்கள் அமைப்பு பங்களிப்பதாகவும் மத்தாய் தெரிவித்தார்.
வரவிருக்கும் புதிய பாரத் ஸ்டேஜ் VII மாசு உமிழ்வு விதிகள் குறித்துப் பேசிய மத்தாய், ஏற்கனவே உள்ள தரநிலைகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், புதிய விதிகள் தற்போதைய உமிழ்வு வரம்புகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவராது என்றார். அதற்குப் பதிலாக, டயர் மற்றும் பிரேக் தேய்மானம் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து வரும் மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் வருவதற்கு முன், தற்போதுள்ள வாகன சோதனை சுழற்சிக்கு பதிலாக, நம்பகமான புதிய சோதனை முறைக்கு இந்தியா மாறும் என்றும், புதிய சோதனை முறை முழுமையாக நிறுவப்பட்ட பின்னரே அடுத்த கட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் மத்தாய் கூறினார்.
ஹைட்ரஜன் (Hydrogen) எரிபொருள் குறித்த தகவலை பகிர்ந்த மத்தாய், 700-பார் அமைப்புடன் செயல்படும் உயர் அழுத்த ஹைட்ரஜன் சிலிண்டர் சோதனை மையத்தை அமைக்க அரசு ஆதரவை ARAI கோரியுள்ளது என்றார். இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.100 கோடி செலவாகும் என்றும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.65 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் 18 மாதங்களுக்குள் சோதனை மையம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் இந்தியா மட்டுமின்றி உலக போக்குவரத்தின் எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எலெக்ட்ரிக் வாகனங்களில் பல நன்மைகள் இருந்தாலும், அதேநேரம் சில குறைப்பாடுகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. அதில் ஒன்றுதான், எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்கும்போது முற்றிலுமாக சத்தம் எழாதது ஆகும். இந்த குறையை களையெடுக்கும் பணிகளில் ஏற்கனவே பல இவி நிறுவனங்கள் ஈடுப்பட்டுவரும் நிலையில், வருகிற அக்டோபர் முதல் இதுதொடர்பான விதி கட்டாயமாக்கப்படுவது அந்த பணிகளை இன்னும் துரிதப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








