சோலார் சன்ரூஃபை உருவாக்கிய FAW கார் நிறுவனம்... தினமும் 10 யூனிட் மின்சாரம் பெறும் வாய்ப்பு?
எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான சார்ஜிங் தேவையை குறைப்பதற்காக வாகன நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த FAW Group என்ற பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனம் தற்போது காரின் சன்ரூஃப் கண்ணாடியை மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனலாக மாற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
எஃப்ஏடபிள்யூ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பத்தில் Perovskite photovoltaic என்ற விசேஷ பூச்சுடந் கூடிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி, அதை காரின் மின்சாரத் தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக, காரின் சன்ரூஃப் கண்ணாடி மற்றும் பானட் பகுதிகளில் சோலார் பேனல்களை பொறுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

300W வரை மின்சாரம் உற்பத்தி
எஃப்ஏடபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, முழு அளவிலான பெரோஸ்கைட் போட்டோவோலடிக் என்ற இந்த முலாம் பூச்சு தொழில்நுட்பத்துடன் கூடிய சன்ரூஃபை உருவாக்கி இருக்கிறது. இது அனைத்து பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்ட சன்ரூஃப் கண்ணாடியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.
போதுமான சூரிய ஒளி கிடைக்கும் சூழலில் இந்த புதிய சன்ரூஃப் மூலமாக 300W வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் கணக்குப்படி, இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 400 kWh வரை மின்சாரம் உருவாக்க முடியும்.
இந்த மின்சாரத்தை காரின் முக்கிய பேட்டரிக்கு கூடுதல் மின்சாரத்தை பெறும் வகையில் பயன்படுத்த முடியும். குறிப்பாக, கார் நிறுத்தப்பட்டிருக்கும் போது இயங்கும் ஏசி, குளிர்ச்சியூட்டும் க்ளவ் பாக்ஸ், காரின் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்கும் சாதனம் உள்ளிட்டவற்றிற்கு தடையில்லாமல் கூடுதல் மின்சாரத்தை பெற வழிவகுக்கும்.
10 யூனிட் வரை உற்பத்தி?
எதிர்காலத்தில் இந்த புதிய தொழில்நுட்பத்தை காரில் பயன்படுத்தப்படும் அனைத்து கண்ணாடிகளிலும் ஒருங்கிணைந்தால், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று எஃப்ஏடபிள்யூ நிறுவனம் கூறுகிறது. இந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 80 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பெரோஸ்கைட் மூலப்பொருள்
இந்த விசேஷ தொழில்நுட்பத்தில் பெரோஸ்கைட் என்பது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்ட பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான சிலிக்கான் சோலார் செல்களுடன் ஒப்பிடும்போது, இதை மிகவும் மெல்லிய படல பூச்சாக கண்ணாடிகள் மேல் பூச முடியும் இதன் விசேஷ அம்சமாக இருக்கிறது. இதன் காரணமாக காரின் வழக்கமான சோலார் பேனல் போல தனியாக பொருத்துவதற்கு பதிலாக, கண்ணாடி போன்ற வளைந்த மேற்பரப்புகளுடன் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை இந்த புதிய மூலப்பொருள் வழங்குகிறது.
ஆரம்ப கட்ட சோதனைகள்
இந்த தொழில்நுட்பம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாவிட்டாலும், கூடிய விரைவில் இந்த சோதனை முயற்சிகள் வெற்றிக் கண்டால் அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த விசேஷ முலாம் பூசப்பட்ட சன்ரூஃப் உள்ளிட்ட கண்ணாடிகளை வாகனங்களில் நீண்ட காலம் பயன்படுத்துவதற்கு நீடித்த உழைப்பு, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை தாங்கும் திறனுடன் புற ஊதாக் கதிர்வீச்சு மற்றும் இதர பாதிப்புகள் குறித்து பல அம்சங்கள் பரிசோதிக்கப்பட வேண்டியுள்ளது.
மின்சார கார்களுக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி கூடுதல் மின்சாரம் உருவாக்கும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கான முக்கியமான முன்னோட்ட முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் காரின் கூரை, ஜன்னல்கள் மற்றும் பானட் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டால், எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் பிரச்னைக்கு பெரிய விடை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications

