டெஸ்லாவுக்கு இப்போதுதான் தென்னிந்தியாவே கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு... திறக்கப்பட்ட முதல் ஷோரூம்!
டெஸ்லா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் மூன்றாவது டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது. ஒட்டுமொத்த தென்னிந்தியாவை கவர் செய்யும் விதமாக பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய டெஸ்லா டீலர்ஷிப் ஷோரூமை பற்றியும், இந்த ஷோரூமில் என்னென்ன டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை வாங்கலாம் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன்பு நுழைந்தது. இருப்பினும், இந்தியாவில் கார்ளை உற்பத்தி செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்ததால் டெஸ்லா கார்களின் விலை இந்தியாவில் சற்று அதிகமாக உள்ளது.

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது. அதன்பின் தேசிய தலைநகர் டெல்லியில் இரண்டாவது ஷோரூமை திறந்தது. இவை இரண்டும் வட இந்தியாவில் இருப்பவர்கள் டெஸ்லா கார்களை வாங்குவதற்கே உதவியாக இருந்தன. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் டெஸ்லா காரை வாங்க வேண்டுமென்றால், மும்பை டெஸ்லா ஷோரூமை தொடர்பு கொண்டு, அங்கிருந்து காரை டெலிவிரி செய்ய வேண்டியதாக இருந்தது.
இதன் காரணமாகவே, இந்தியாவில் 3வது ஷோரூமை தென்னிந்தியாவிற்கு மத்தியில் பெங்களூருவில் டெஸ்லா திறந்துள்ளது. இது டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்த திட்டமே ஆகும். மும்பையில் முதல் ஷோரூமை திறக்கும்போதே பெங்களூருவில் ஒரு டீலர்ஷிப் ஷோரூமை திறக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கான பணிகளில் டெஸ்லா ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.

பெங்களூருவில் வொயிட்ஃபீல்டு மெயின் ரோட்டில் VR பெங்களூரு பகுதியில் டெஸ்லாவின் புதிய எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு டெஸ்லாவின் மாடல் ஒய் மற்றும் மாடல் ஒய் எல் என்கிற இரு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு கிடைக்கும். இதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் இந்த கார்கள் இரண்டும் புதிய ஷோரூமில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில், மாடல் ஒய் எல் ஆனது சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் டெஸ்லாவின் முதல் காரான மாடல் ஒய் -இன் லாங் வீல்பேஸ் வெர்சனாக மடல் ஒய் எல் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மாடல் ஒய் காரின் அதே தோற்றத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்டதாக மாடல் ஒய் எல் உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு டெஸ்லா ஷோரூமில் கார்கள் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, கார்களை வாங்கிய பின் தேவைப்படும் சர்வீஸ் உள்ளிட்ட தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மாடல் ஒய் எல் காரின் அறிமுகத்துடன், மாடல் ஒய் காரின் லாங் ரேஞ்ச் வேரியண்ட்டிற்கான பேட்டரியையும் டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் அப்கிரேட் செய்துள்ளது.
இதனால், மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் 64kWh மற்றும் 83kWh பேட்டரி ஆப்ஷன்களில் தற்சமயம் கிடைக்கிறது. இதில் 64kWh பேட்டரியில் 500கிமீ வரையிலான ரேஞ்சையும், 83kWh பேட்டரியில் 662கிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம். மாடல் ஒய் எல் காரில் 88kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 681கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு டெஸ்லா காரை வாங்குவது எளிதாகி உள்ளது. அதேநேரம், பெங்களூருவில் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளதால், இன்னும் சில வருடங்களுக்கு சென்னையில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட வாய்ப்பிலை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் முதல் ஷோரூம்களை திறந்த பிறகே தென்னிந்தியாவில் நெட்வொர்க்கை பலப்படுத்த டெஸ்லா முயற்சிக்கும்.


Click it and Unblock the Notifications