1997இல் உருவான கூட்டணி... இந்திய கம்பெனியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ்!
இந்தியாவின் சாலைகளில் அதிவேகமாக சீறிப்பாயும் சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸின் (Mercedes-Benz) இதயத் துடிப்பான என்ஜின், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது முற்றிலும் உண்மை! இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், ஜெர்மனியின் புகழ்பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்காக மட்டும் 2 லட்சம் என்ஜின்களை தயாரித்து ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
1997-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பிரம்மாண்டமான கூட்டணி, தற்போது மூன்று தசாப்தங்களை நெருங்கி வரும் வேளையில், இந்த இமாலய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் திறமைக்கும் ஜெர்மனியின் தொழில்நுட்பத்திற்கும் சான்றாக விளங்கும் இந்த கூட்டணியில், 2 லட்சமாவது என்ஜினாக 6-சிலிண்டர் M256 பெட்ரோல் என்ஜின் வெளிவந்துள்ளது.

இந்த பெட்ரோல் என்ஜின் ஆனது மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிநவீன சொகுசு கார் மாடலான 'மெர்சிடிஸ் பென்ஸ் GLS 450'-இல் பொருத்தப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சத்தை மேலும் கூட்டுகிறது. ஜெர்மனி நாட்டின் துல்லியமான பொறியியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு இணையான என்ஜின்களை இந்தியாவில் எப்படி தயாரிக்க முடிகிறது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.
புனேயில் உள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சாகன் அதிநவீன தொழிற்சாலைதான் இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் ரகசியம் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தித் தரம் மற்றும் நுணுக்கங்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தொழிற்சாலை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதில் இந்த தொழிற்சாலையின் பங்களிப்பும் முக்கியமானது ஆகும்.

இந்த அசாதாரண கூட்டணியால் இந்தியாவை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளுக்கு என்ன பயன் தெரியுமா? மெர்சிடிஸ் பென்ஸ் தொழில்நுட்பத்தின் தாக்கம் ஃபோர்ஸ் நிறுவனத்தின் வாகனங்களிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. உதாரணமாக, இந்தியாவின் கரடுமுரடான பாதைகளிலும் இயங்கக்கூடிய ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha) காரில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதேபோல், சாலைகளில் அதிகம் பயணிக்கும் ஃபோர்ஸ் டிராவலர் (Force Traveller) மற்றும் ஃபோர்ஸ் அர்பானியா (Force Urbania) போன்ற வாகனங்களும் மெர்சிடிஸ் என்ஜின் கட்டமைப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஃபோர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறன் பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
2 லட்சம் என்ஜின்கள் உற்பத்தி மைல்கல் எட்டியிருப்பது குறித்து ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசான் ஃபிரோடியா கூறுகையில், "2 லட்சமாவது என்ஜின் என்பது வெறும் உற்பத்தி மைல்கல் என்பதை காட்டிலும் அதிகமானது. இது நம்பிக்கை, பொறியியல் துல்லியம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட நீண்டகால உறவை பிரதிபலிக்கிறது" என கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்ஸ் மோட்டார்ஸின் இந்த அசாத்திய சாதனை, உலக அரங்கில் இந்திய வாகன உற்பத்தியின் மீதான நம்பகத்தன்மையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஏற்கனவே BMW, ரெனால்ட், நிசான், ஹோண்டா, ஹூண்டாய், கியா, டொயோட்டா போன்ற சர்வதேச முன்னணி கார் பிராண்டுகளும், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற உள்ளூர் நிறுவனங்களும் இந்தியாவைத் தங்களின் உற்பத்தி உறைவிடமாக மாற்றியுள்ளன.
உலகத்தரம் வாய்ந்த தொழிற்நுட்பங்களை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதைப் பார்க்கும்போது, இன்னும் எத்தனை சர்வதேச ஜாம்பவான்கள் தங்களின் என்ஜின் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இது, நம் நாட்டின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் அசாத்திய வளர்ச்சிக்கு கிடைத்த மிகச்சிறந்த சான்றாகும்.


Click it and Unblock the Notifications