சென்னை ஆலையை EV உற்பத்தி மையமாக மாற்ற ஃபோர்டு திட்டம்
சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள தனது ஆலையை மின்சார வாகனங்களுக்கான மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்ற ஃபோர்டு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, குறைந்த விலை மின்சார வாகனங்களை தயாரித்து ஆசிய- பசிபிக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய மையமாக சென்னை ஆலையை பயன்படுத்த அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஃபார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், மறைமலைநகர் ஆலையை விரிவுபடுத்தும் வகையில் Brownfield என்ற திட்டம் ஃபோர்டு பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் புதிதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்குவதற்குப் பதிலாக, தற்போதுள்ள கட்டமைப்பை மேம்படுத்தி EV வாகன உற்பத்திக்கு பயன்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உற்பத்தி மையம்
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மறைமலைநகர் ஆலையில் மின்சார கார்களை அசெம்பிள் செய்வதுடன் பேட்டரி பேக்குகள், பேட்டரி செல்கள், எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் பிற முக்கிய EV பாகங்களையும் அங்கேயே தயாரிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுபோன்று ஒரே இடத்தில் EV வாகன உற்பத்திக்கு தேவையான அனைத்து முக்கிய உதிரிபாகங்களையும் தயாரிப்பதன் மூலமாக உற்பத்திச் செலவை கணிசமாக குறைக்க முடியும் என்பதுடன், உள்நாட்டு பாகங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் உதவும். குறிப்பாக, குறைந்த விலையில் மின்சார வாகனங்களை உருவாக்கி ஆசிய-பசிபிக் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது ஃபோர்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிகிறது.
பெரிய அளவில் முதலீடு
ஒருங்கிணைந்த EV மற்றும் பேட்டரி உற்பத்தி திட்டத்துக்காக ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை ஃபோர்டு முதலீடு செய்யலாம் என தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிப்பதாகவும் ஃபார்ச்சூன் இந்தியா செய்தியில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டம் மற்றும் முதலீட்டு தொகை குறித்து ஃபோர்டு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த 2025ம் ஆண்டு அக்டோபரில் மறைமலைநகர் ஆலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ரூ.3,250 கோடி முதலீடு செய்ய ஃபோர்டு அறிவித்திருந்தது. அந்த திட்டம் முக்கியமாக எஞ்சின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நோக்கமாக கொண்டது. ஆண்டுக்கு 2.35 லட்சம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டு இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
சூடுபிடித்த எலெக்ட்ரிக் வாகன விற்பனை
இந்தநிலையில், தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனை சூடுபிடிக்க துவங்கி இருப்பதால், இந்த EV கார் உற்பத்தியை மறைமலைநகர் ஆலையில் துவங்கலாமா என்று ஃபோர்டு நிறுவனம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இந்தியாவில் 15.41 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக JMK Research, Vahan தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஆண்டின் முதல் ஆறுமாதங்களை ஒப்பிடுகையில் 43 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, மின்சார பயணிகள் கார்களின் பதிவுகள் 83 சதவீதம் அதிகரித்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் EV மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கலாம். எனினும், சென்னை ஆலையில் EV வாகன உற்பத்தி செய்யும் திட்டத்தை ஃபோர்டு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
Source: Fortune India


Click it and Unblock the Notifications


