குறைவான விலையில் ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய கார்
மாருதி பெலினோ மற்றும் ஹூண்டாய் i20 ஆகிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்குப் போட்டியாக ஹோண்டா விற்பனை செய்து வந்த ஒரு கார் ஜாஸ் (Jazz). இந்தக் காரை தற்போது அந்நிறுவனம் அப்டேட் செய்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இல்லை, வெளிநாடுகளில். இந்தியாவில் இந்தக் காரை 2023ம் ஆண்டே விற்பனையில் இருந்து நீக்கிவிட்டது ஹோண்டா.
BS6 இரண்டாம் கட்ட விதிமுறைகள் அமல் மற்றும் RDE விதிமுறைகள் அமலின் காரணமாக அந்த நேரம் இந்தியாவில் குறைவாக விற்பனையாகி வந்த இந்தக் காரினை அப்டேட் செய்ய விரும்பாமல் விற்பனையை நிறுத்திவிட்டது ஹோண்டா. இந்தியாவில் தான் இது தோல்வியடைந்த காராக பார்க்கப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் ஜாஸுக்கு இன்னும் சந்தை இருக்கிறது.

மேலும், இந்த 2026ம் ஆண்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது ஹோண்டா ஜாஸ். சர்வதேச அளவில் 2001ம் ஆண்டில் இருந்து இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2009ல் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு குறைவான விற்பனை காரணமாக 2013ல் நிறுத்தப்பட்டு, மீண்டும் 2015ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை அப்டேட் வெர்ஷனாக மீண்டும் களமிறங்கியது.
மாருதிக்கும், ஹூண்டாய்க்கும் ஜாஸ் மூலம் போட்டியளிக்க நினைத்தது ஹோண்டா. ஆனால் எதிர்பார்க்க அளவிற்கு ஜாஸ் வெற்றியைப் பெறவில்லை. 2015ம் ஆண்டு மறுஅறிமுகம் செய்யப்பட்ட மாதம் தான் அதிகபட்சமாக 6,500 யூனிட்டுகள் விற்பனையைப் பதிவு செய்திருக்கிறது ஜாஸ். மற்றபடி சராசரியாக 1,500 முதல் 3,000 யூனிட்டுகள் வரை மட்டுமே இந்த ஹேட்ச்பேக் கார் விற்பனையாகி வந்திருக்கிறது.

மேலும், 2020ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய வாடிக்கையாளர்கள் எஸ்யூவியை நோக்கி நகரவே, ஜாஸின் விற்பனையை ஒட்டுமொத்தமாக நிறுத்தி பெட்டியைக் கட்டிவிட்டது ஹோண்டா. ஜாஸை, ஃபிட் என்ற பெயரில் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. தற்போது அங்கேயே 25ம் ஆண்டு நிறைவு செய்வதைக் கொண்டாடும் விதமாக ஃபிட்டை அப்டேட் செய்துள்ளது.
மெக்கானிக்கலாகவோ, வசதிகள் ரீதியாகவோ எந்த மாற்றமும் இல்லாமல், காஸ்மெடிக் ரீதியாக மட்டுமே புதிய ஃபிட்டை ஹோண்டா அப்டேட் செய்துள்ளது. அதுவும் குறிப்பிட்ட வேரியன்ட்களில் மட்டும் தான். இந்த அப்டேட் செய்யப்பட்ட ஃபிட் ஹேட்ச்பேக் காரை இந்திய மதிப்பிற்கு 10 லட்சம் ரூபாய் முதல் 17 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் தங்கள் சொந்த நாட்டில் ஹோண்டா விற்பனை செய்யவுள்ளது.
1.5 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என இரண்டு வகையான பவர்ட்ரெயின் தேர்வுகளை ஹோண்டா ஜாஸ் கொண்டுள்ளது. NA பெட்ரோல் இன்ஜினானது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், 116 hp பவர் மற்றும் 142 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
e:HEV ஹைபிரிட் சிஸ்டத்தில், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் இன்ஜின் சேர்ந்து, ஒட்டுமொத்தமாக 121 hp பவர் மற்றும் 253 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பவர்ட்ரெயினில் e-CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட வேரியன்ட்களில் மட்டும் இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயினுடன் 4 வீல் டிரைவ் வசதியும் கொடுக்கப்படுகிறது.
ஜாஸ் (அல்லது ஃபிட்) ஹேட்ச்பேக் காரை ஹோண்டா மீண்டும் இந்தியாவில் வெளியிடும் திட்டத்தில் இல்லை. இந்திய ஆட்டோமொபைல் சந்தையும் எஸ்யூவி அல்லாத வேறு புதிய தயாரிப்புக்கு ஏற்ற நிலையில் என்பதும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. எனவே 2015ஐ போல ஹோண்டா ஜாஸ் மீண்டும் இந்தியாவிற்கு வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதியைத் தவிர மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எஸ்யூவி அல்லாத கார்களில் கவனம் செலுத்துவதைக் குறைத்துவிட்டன. மாருதியுமே தற்போது எஸ்யூவிக்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக புதிய தயாரிப்புகள் என்னும் போது எஸ்யூவி அல்லாத பிற வகை கார்களை மாருதியுமே சமீபமாகத் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்தஸ பத்தாண்டுகளுக்கு இந்தியாவில் எஸ்யூவிக்களின் ஆட்சி தான். அதில் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு இடமில்லாதது போலவே தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications