எவ்வளவு போராடி பார்த்தும் முடியல... 23 வருஷத்துக்கு பின் கடினமான முடிவை எடுக்கும் ஹோண்டா!
ஹோண்டா மோட்டார் (Honda Motor) நிறுவனம் தென் கொரியாவில் இருந்து மூட்டை முடிச்சுகளை கட்டி நடையை கட்ட போவதாக அறிவித்துள்ளது. இதன்படி, ஆசியாவிலேயே மிகவும் போட்டி மிகுந்த கார் சந்தைகளுள் ஒன்றான தென் கொரியாவில் இருந்து சுமார் 23 வருட வரலாற்றை முடித்துக் கொண்டு ஹோண்டா நிறுவனம் வெளியேற உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார் நிறுவனத்திற்கு, ஜப்பானை தாண்டி மிக அருகாமையில் உள்ள மற்றொரு பொருளாதாரத்தில் வளர்ந்த நாடு தென்கொரியா ஆகும். ஜப்பானை போன்று தென்கொரியாவில் இருந்தும் ஹூண்டாய் (Hyundai), கியா (Kia) போன்ற உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. இருப்பினும், இத்தகைய சந்தையில் இருந்து ஹோண்டா விடைபெற உள்ளது.

நிறுவனத்தின் இடைக்கால மற்றும் நீண்டகாலப் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் வகையில், நிறுவனத்தின் சொத்துக்களை ஒருமுகப்படுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா மோட்டார் தெரிவித்துள்ளது. மேலும், இந்த முடிவானது முழுமையான பரிசீலனைக்குப் பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹோண்டா கூறியுள்ளது. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் கார் சந்தைகளுள் தென்கொரியாவும் ஒன்றாகும்.
அதனை சமாளித்து போராடலாம் என பார்த்தால், தென்கொரியாவின் பணபரிமாற்ற மதிப்பின் தொடர் அழுத்தங்கள் ஹோண்டாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளன. இதன் காரணமாகவே, வேறு வழியின்றி தென்கொரியாவில் தனது வணிகத்தை நிறுத்தும் முடிவிற்கு ஹோண்டா தள்ளப்பட்டுள்ளது. கார்கள் விற்பனை நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட தனது நிறுவனத்தின் கார்களுக்கான சர்வீஸ்கள், வாரண்டி சப்போர்ட் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா வழங்க உள்ளது.

மேலும், தென்கொரியாவில் கார்கள் விற்பனையை மட்டுமே ஹோண்டா நிறுத்திக் கொள்ளவுள்ளதே தவிர்த்து, மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து விற்பனை செய்ய ஹோண்டா மோட்டார் முடிவெடுத்துள்ளது. தென்கொரிய சந்தையில் ஹோண்டா 2001ஆம் ஆண்டில் முதல்முறையாக நுழைந்தது. ஆரம்பத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் மட்டும் ஈடுப்பட்டுவந்த ஹோண்டா மோட்டார், பின்னர் 2003ஆம் ஆண்டில் கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக சுமார் 1 லட்சத்து 8,600 கார்களை தென்கொரியாவில் ஹோண்டா மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தென்கொரிய சந்தையில் பிரபலமான ஹோண்டா கார் மாடல்களாக அக்கார்ட் (Accord) மற்றும் சி.ஆர்-வி (CR-V) விற்பனை செய்யப்படுகின்றன.
தென்கொரியாவில் மட்டுமின்றி, தென்கொரிய மற்றும் சீன நிறுவனங்களின் போட்டியால் மற்ற ஆசிய நாடுகளிலும் கார்களை விற்பனை செய்வதில் ஹோண்டா தடுமாற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக, சீனாவில் கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 6 லட்சத்து 46 ஆயிரம் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளை விடவும் 60% குறைவாகும்.
இதன் எதிரொலியாக, சீனாவில் குறைந்தது ஒரு கார் தொழிற்சாலையை ஆவது ஹோண்டா மூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தியா ஓர் முக்கியமான சந்தையாக விளங்குகிறது. ஹோண்டாவில் இருந்து இந்தியாவில் அடுத்ததாக '0 ஆல்பா' (O Alpha) என்கிற எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்கொரியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் வேகமாக விரிவடைந்ததும், அதற்கேற்ப ஹோண்டா தன்னை விரைவாக மாற்றிக் கொள்ளாததும் தான் அந்த நாட்டு சந்தையில் இருந்து இந்த ஜப்பானிய நிறுவனம் வெளியேறுவதற்கான முக்கியமான காரணம். ஏனெனில், பணபரிமாற்ற மதிப்பிழப்பை ஹோண்டாவை போல் எல்லா நிறுவனங்களும் தான் சந்திக்கின்றன.


Click it and Unblock the Notifications