விலை வெறும் 5 லட்சம் ரூபாய் தான்.. வருது புதிய ஹோண்டா சப்-காம்பேட் எஸ்யூவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தை கொஞ்சம் தந்திரம் நிறைந்தது. நேரடியாக இதைத் தான் இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிறப்பான ஒரு கார் வேண்டும், மனநிறைவான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும், குறைவான விலையைக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் மலிவான தயாரிப்பாக இருக்கக்கூடாது. இதனை இந்தியாவில் வெற்றிகரமாகப் புரிந்து கொண்ட நிறுவனங்கள் சில தான்.
இந்திய வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து வரும் நிறுவனங்களில் ஹோண்டாவும் ஒன்று. ஆனால் நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருந்த நிறுவனம் திடீரென திசைமாறிச் சென்று இப்போது அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. அதிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தற்போது அதற்கு ஒரு துருப்புச் சீட்டு கிடைத்திருக்கிறது.

அது வெறெதுவும் இல்லை, சப் காம்பேக்ட் எஸ்யூவி கார் தான். அனைத்து நிறுவனங்களிடமும் இந்த துருப்புச் சீட்டு இருக்கிறது. அதனை அந்த நிறுவனங்கள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி தோல்வி அமைகிறது. ஸ்கோடா அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு இப்போது இந்திய சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியிருக்கிறது. ஹோண்டாவும் மீண்டு வருமா?
இந்தியாவில் தற்போது ஹாட் செல்லிங் பிரிவு என்றால் அது சப்-காம்பேக் எஸ்யூவி பிரிவு தான். 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களை சப்-காம்பேக்ட் என்று இந்திய சந்தையில் குறிப்பிடுகிறோம். 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கு அரசு குறைவான வரியை விதித்திருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையில் குறைவான விலையில் இந்தப் பிரிவில் கார்களை வெளியிட முடியும். இதனாலேயே அதிக கார்கள் விற்பனையாகும் பிரிவாக இருந்து வருகிறது.

இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவிலேயே புதிய கார் ஒன்றை வெளியிட ஹோண்டா முடிவு செய்திருக்கிறது. இது ஹோண்டாவிற்கு புதிய பிரிவெல்லாம் இல்லை. ஏற்கனவே WR-V என்ற எஸ்யூவியை விற்பனை செய்து வந்து 2023ல் அதன் விற்பனையை நிறுத்தியது. தற்போது மீண்டும் புதிய எஸ்யூவியை அடிப்படையில் இருந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் கார் மாடல்களையே பட்டி டிங்கரிங் செய்து மாற்றி இந்திய சந்தையிலும் ஹோண்டா வெளியிட்டு வந்தது. அந்தத் திட்டம் தவறானதோ என தற்போது உணரத் தொடங்கியிருக்கிறது. அதனால் இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையில், இந்தியாவிற்கென முற்றிலும் தனித்துவமான காராக புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியை உருவாக்க ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது.
ஸ்கோடாவும் இதே பாதையில் பயணித்தே தற்போது ஓரளவு வெற்றி கண்டிருக்கிறது. கைலாக் என்ற சப் 4 மீட்டர் எஸ்யூவி காரை, இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையில் வடிவமைத்து, விலை, வசதிகள், ப்ரீமியம்னஸ் என அனைத்தையும் போதுமான அளவில் கொடுத்து திருப்திப்டுத்தியிருக்கிறது. இதன் விளைவாக ஸ்கோடாவின் 60% விற்பனை தற்போது கைலாக்கினுடையதாக இருக்கிறது.
அமேஸ் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினையே புதிய எஸ்யூவியிலும் ஹோண்டா கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விட நல்ல பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கக்கூடிய இன்ஜினை புதிதாக உருவாக்கி பயன்படுத்தினாலும் சிறப்பு தான். ஆனால் அது போலான திட்டங்கள் எதுவும் இருப்பதாக இதுவரை தகவல் இல்லை.
2030ம் ஆண்டுற்குள் இந்தியாவில் 10 புதிய கார்களை வெளியிட ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது. அதில் ஏழு கார்கள் எஸ்யூவி வகையறா தான். அதில் ஒரு மாடலாக ஹோண்டாவின் இந்தப் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி இருக்கும். அதற்கு முன்னதாக சில வாரங்களில் ZR-V என்ற புதிய ப்ரீமியம் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது அந்நிறுவனம். இதனை வரவேற்க இப்போது நாம் தயாராவோம். இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிப்டும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய நிறுவனம் ஒன்று இல்லை. ஏற்கனவே பரீட்சியமான நிறுவனம் தான். இப்போதும் வாடிக்கையாளர்களுக்கு அதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சரியான விகிதத்தில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய சிறப்பான காரை வழங்க வேண்டியது மட்டும் தான் ஹோண்டாவின் பொறுப்பு, வெற்றியை வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதனை இந்த முறை அந்நிறுவனம் சிரத்தையாக மேற்கொள்ளும் என நாம் நம்புவோம்.


Click it and Unblock the Notifications